மும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா தனது 38 வது வயதில் ஐசிசி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திருப்பதாக முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் நாசர் உசேன் தெரிவித்துள்ளார்.
15 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் ரோகித் சர்மா 11 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்தும் ஒரு முறை கூட ஐசிசி தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கவில்லை. அது மட்டும் இல்லாமல் ரோகித் சர்மா ஐம்பது ஓவர் கிரிக்கெட்டில் மூன்று முறை இரட்டை சதம் அடித்திருக்கின்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நாசர் ஹூசைன், என்னால் இந்த செய்தியை நம்பவே முடியவில்லை . ரோகித் சர்மா நம்பர் ஒன் இடத்தை பிடித்து விட்டார் என்று சொன்னவுடன் என் மனதில் தோன்றிய முதல் கேள்வி. ஏன் இதற்கு முன்பு அவர் நம்பர் ஒன் இடத்தை பிடித்ததே இல்லையா என்பதுதான்.
ஆனால் பலரும் இப்போதுதான் ரோகித் சர்மா நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறார் என்று கூறினார்கள். இது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. அவர் எனக்குத் தெரிந்து நீண்ட காலமாக சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதம் அடித்திருக்கின்றார்.
இவ்வளவு செய்தும் ரோஹித் சர்மா நம்பர் ஒன் இடத்தை பிடிக்கவில்லையா என்றால் ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 15 ஆண்டுகளாக எந்த அளவுக்கு வீரர்கள் விளையாடியிருப்பார்கள் என்பதை யோசிக்க வேண்டும் என நினைக்கின்றேன். ரோகித் சர்மா ஒரு நாள், டி20 கிரிக்கெட்டில் மிகவும் பிரம்மாண்டமான வீரர் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கின்றார்.
அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ரோகித் சர்மா நம்பர் ஒன் வீரராக இருப்பதற்கு அனைத்து தகுதியும் இருக்கின்றது. ரோகித் சர்மாவுக்கு ஒரு நாள் கிரிக்கெட்டில் 20 ரன்கள், 30 ரன்கள் எடுப்பதெல்லாம் விருப்பமே கிடையாது. அடித்தால் சதம் அல்லது இரட்டை சதம் தான் அடிப்பார். இதற்கு அவருடைய ஸ்ட்ரைக் ரேட் ஒரு முக்கிய காரணம். கேப்டனாக இருந்த போது ரோகித் சர்மா அணியின் கலாச்சாரத்தை மாற்றி இருக்கிறார். இது இந்திய அணிக்கு ஒரு நல்ல பழக்கத்தை கொடுத்திருக்கிறது. 38 வயதாகியும் இன்னும் அவர் ரன்கள் பசியுடன் இருக்கின்றார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் அவர் விளையாடிய விதத்தை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது என நாசர் உசேன் தெரிவித்துள்ளார்.