மும்பை: சோசியல் மீடியா மூலமாக ரசிகர்கள் உடனான நெருக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று தனது மேனேஜர்கள் கூறிய போது, கிரிக்கெட்டை நன்றாக ஆடினாலே போதுமானது. மற்றபடி எந்த பிஆர் பணிகளையும் செய்ய தேவையில்லை என்று தோனி தெரிவித்துள்ளார். தோனியின் இந்த கருத்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை குறி வைத்து கூறப்பட்டதாக சோசியல் மீடியாவில் விவாதமாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போது இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு நான் விண்ணப்பிக்கலாமா என்ற கேஎல் ராகுலிடம் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர் கேட்டிருக்கிறார். அதற்கு கேஎல் ராகுல், ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக இருக்கும் போது நீங்கள் சந்திக்கும் அரசியலை விடவும் இந்திய அணியில் ஆயிரம் மடங்கு அதிகமான அரசியலை சந்திக்க நேரிடும் என்று கூறி இருக்கிறார்.

அதாவது இந்திய அணியின் பயிற்சியாளர், கேப்டன், துணைக் கேப்டன் என்று எந்த பொறுப்புக்கு வர வேண்டும் என்றாலும், மிகப்பெரிய அரசியல் நிர்வாகத்திற்குள் நடக்கும் என்று பல்வேறு தருணங்களிலும் ரசிகர்களுக்கு வெளிப்படையாகவே தெரிந்தது தான். இதனால் பொறுப்புக்கு வருவதற்காக இந்திய வீரர்களும் கூட சில நேரங்களில் பிஆர் ஏஜென்சிகள் மூலமாக பணிகளை மேற்கொள்வார்கள்.
அந்த வகையில் சோசியல் மீடியாவை பயன்படுத்தாத கேப்டனாகவும் தோனி செயல்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. இதுகுறித்து தோனியிடம் சோசியல் மீடியாவில் இருந்து விலகி இருப்பதற்கான காரணம் என்ன என்ற கேள்விக்கு, வாழ்க்கையின் எந்த நேரத்திலும் சோசியல் மீடியாவின் ரசிகனாக இருந்ததில்லை. எனக்கு பல்வேறு தருணங்களிலும் நிறைய மேனேஜர்கள் இருந்திருக்கிறார்கள்.
அவர்கள் அனைவருமே என்னிடம் சோசியல் மீடியாவை பயன்படுத்தி ரசிகர்களுடன் இணக்கமாக இருங்கள் என்றே கூறுவார்கள். 2004ல் இந்திய அணிக்காக அறிமுகமான போது, சில ஆண்டுகளில் ட்விட்டர் அதிக பிரபலமானது. அதன்பின் இன்ஸ்டாகிராம் வந்துவிட்டது. அப்போது மேனேஜர்கள், நீங்கள் சில பிஆர் பணிகளை செய்ய வேண்டும். இதனை செய்யுங்கள், அதனை செய்யுங்கள் என்று கூறுவார்கள்.
அதற்கு நான், நீங்கள் நன்றாக கிரிக்கெட் விளையாடினாலே போதுமானது. உங்களுக்கு எந்த பிஆர் பணிகளும் தேவையில்க்லை என்று பதிலளிப்பேன் என்று தெரிவித்துள்ளார். தோனியின் இந்த வீடியோ ட்ரெண்டான நிலையில், அது ரோஹித் சர்மாவை மறைமுகமாக தாக்கி இருப்பதாக ரசிகர்களிடையே விவாதமாகியுள்ளது.
டி20 உலகக்கோப்பைக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பெரிதாக ரன்களை சேர்க்காத நிலையில், அவர் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் குரல் எழுப்ப தொடங்கியுள்ளனர். ஆனால் சோசியல் மீடியாவில் ரோஹித் சர்மாவின் பிஆர் ஏஜென்சிகள், இப்போது வரை ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாகவே சில கணக்குகள் மூலமாக பதிவிட்டு வருவதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
அதேபோல் வெளிநாடுகளில் விளையாடுகையில் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்த போது, ஒரு தோல்வியடைந்தாலோ அல்லது பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் செய்தாலும் கூட மிகப்பெரிய விமர்சனங்கள் எழும். ஆனால் ரோஹித் சர்மா தொடர்ச்சியாக 6 போட்டிகளில் 5 தோல்விகளை சந்தித்துள்ள போதும், அவரை கேப்டன்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் எழவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.