மும்பை: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா - ரித்திகா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், இன்னும் 2 நாட்களில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட ஹிட்மேன் பயணிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 22ஆம் தேதி பெர்த் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தயாராகி வரும் சூழலில், இந்திய அணியின் கேப்டன் ஹிட்மேன் ரோஹித் சர்மா எப்போது ஆஸ்திரேலியா செல்வார் என்று தெரியாமலேயே இருந்தது. ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா கர்ப்பமாக இருந்ததால், அவருக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின் ரோஹித் சர்மா பேசுகையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவேனா என்பது தெரியாது. இதுகுறித்து விரைவில் முடிவு எடுப்பேன் என்று சூசகமாக பதில் அளித்தார். இதன் மூலமாக ரித்திகாவிற்கு பிரசவம் எப்போது நடக்கும் என்பதை பொறுத்தே ரோஹித் சர்மாவின் பயணம் இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்றிரவு ரோஹித் சர்மா - ரித்திகா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது தெரிய வந்துள்ளது. மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் ரோஹித் சர்மா - ரித்திகா தம்பதிக்கு 2வது குழந்தை பிறந்த நிலையில், இருவரின் உடல்நிலையும் நன்றாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் இரு குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அதேபோல் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா தனது கடமையை செய்யவும் தயாராகி இருப்பது தெரிய வந்துள்ளது. நாளை மறுநாள் மும்பையில் இருந்து விமானம் வாயிலாக சிட்னிக்கு செல்ல ரோஹித் சர்மா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலமாக ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இருந்து ரோஹித் சர்மாவால் விளையாட முடியும்.
பெர்த் டெஸ்ட் போட்டிக்கு 3 நாட்களுக்கு முன்பாக ஆஸ்திரேலியாவில் இருந்தாலும், போதுமான பயிற்சி இல்லாமல் ரோஹித் சர்மா களமிறங்குவது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் ரோஹித் சர்மா மும்பையிலேயே தொடர்ச்சியாக பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அதேபோல் ரோஹித் சர்மாவிடம் அனுபவமும் இருப்பதால், அவர் களமிறங்கி அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.