மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்விக்கு பின், இந்திய அணி வீரர்களுக்கு தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இனி எந்த வீரரும் திட்டத்தைவிட்டு வேறு ஸ்டைலில் விளையாடக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ள கம்பீர், வேறு ஸ்டைலில் விளையாடினால் பெஞ்ச் செய்யவும் தயங்க போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய அணி தயாராகி வருகிறது. மெல்போர்னில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதன் காரணமாக பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.

இனி ஆஸ்திரேலியா அணியை வீழ்த்த வாய்ப்பில்லை என்றாலும், தொடரை சமன் செய்து பார்டர் கவாஸ்கர் டிராபியை ரீடெய்ன் செய்யும் வாய்ப்பு இந்திய அணிக்கு இருக்கிறது. சிட்னி மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்கவுள்ள கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றால் மட்டுமே, தொடரை சமன் செய்து கவுரவமாக இந்தியாவுக்கு வர முடியும்.
அதேபோல் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி இருவரின் ஆட்டம் கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஏற்கனவே சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இவர்கள் இருவரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இதனால் பேட்டிங் ஆர்டர் சொதப்பல்களும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.
இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் வந்த பின், இந்திய அணி நினைத்து பார்க்க முடியாத தோல்விகளை அடுத்தடுத்து சந்தித்து வருகிறது. இதனால் பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் பதிலளிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கு பின் ஓய்வறையில் நடந்த சம்பவங்கள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4வது டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்விக்கு பின் கம்பீர் ஓய்வறையில் பேசும் போது, நான் இதுவரை பார்த்ததே போதும் என்று நினைக்கிறேன். இனி வரும் நாட்களில் என்ன மாதிரியான ஸ்டைலில் ஆட வேண்டும், என்ன திட்டம் என்பதை முடிவு செய்கிறேன். அந்த திட்டத்தின் படி விளையாடாமல், தங்களின் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோரை பெஞ்ச் செய்யவும் தயங்க போவதில்லை என்று கூறியதாக தகவல் கிடைத்துள்ளது.
எந்த வீரரையும் நோக்கி சொல்லாமல், மறைமுகமாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய மூவரையும் தான் கம்பீர் விமர்சித்திருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் போட்டியின் 2வது இன்னிங்ஸ்-க்கு பின் இவர்கள் மூவரும் தொடர்ச்சியாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.