பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் இந்திய அணி 4க்கு பூஜ்ஜியம் அல்லது நான்கிற்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும்.
இந்த சூழலில் இந்திய அணி தங்களது முதல் டெஸ்ட் போட்டியில் பெர்த் நகரில் வரும் 22ஆம் தேதி ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்க மாட்டார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதேபோன்று இந்திய அணியின் நட்சத்திர வீரரான சுப்மன் கில்லுக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் முதல் டெஸ்டில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். ரோகித் சர்மா இல்லாததால் அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் பயிற்சி ஆட்டத்தில் சரியாக விளையாடவில்லை. இதனால் அபிமன்யு ஈஸ்வரன் இந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார். அவருக்கு பதில் கே எல் ராகுல் மீண்டும் தொடக்க வீரராக களம் இறங்கப் போகிறார். இரண்டாவது வீரராக ஜெய்ஷ்வால் அவருக்கு ஜோடியாக இருப்பார். இந்த சூழலில் கில் காயம் காரணமாக விளையாடதால், மூன்றாவது வீரராக படிக்கல் விளையாட வாய்ப்பு இருக்கிறது.
பயிற்சி ஆட்டத்தில் படிக்கல் சிறப்பாக விளையாடியதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நான்காவது வீரராக விராட் கோலியும், ஐந்தாவது வீரராக ரிஷப் பண்டும் இருக்கின்றனர். இந்த சூழலில் ஆறாவது வீரராக சப்ராஸ்கான் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சர்பராஸ்கானுக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக பயிற்சி ஆட்டத்தின் சிறப்பாக விளையாடிய துருவ் ஜூரலுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. ஏழாவது வீரராக ஆல்ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டிக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே சிறப்பாக செயல்படும் நிதீஷ்குமார்க்கு இது அறிமுக டெஸ்ட் போட்டியாக அமையலாம்.
எட்டாவது வீரராக அஸ்வின் விளையாட கூடும். ஒன்பதாவது வீரராக பும்ரா பத்தாவது வீரராக ஹர்ஷித்ரானா 11-வது வீரராக பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. இந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா, முஹம்மது சிராஜ் ஆகியோர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு இருக்காது என்று கூறப்படுகிறது.