அடிலெய்டு: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய பவுலர்களின் லெந்த் தவறாக இருந்ததை பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் ஒப்புக் கொண்டுள்ளார். முதல் நாளின் கடைசி செஷனை பயன்படுத்த தவறியதாக கூறிய அவர், ஹர்சித் ராணாவுக்கு இந்த டெஸ்ட் போட்டி மிகப்பெரிய பாடமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மீது ஆஸ்திரேலியா அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், ஆஸ்திரேலியா அணி 337 ரன்களை குவித்தது. அதிலும் முதல் நாளின் கடைசி செஷனில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் மெக்ஸ்வீனி மற்றும் லபுஷேன் இருவரும் இந்திய பவுலர்களை எளிதாக கையாண்டனர்.

புதிய பந்தில் வெளிச்சமும் குறைவாக இருந்த போது கூட இந்திய பவுலர்களால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. அதற்கு இந்திய பவுலர்களின் லெந்த் தவறாக இருந்ததே காரணமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஸ்டம்ப் லைனில் அல்லாமல் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனிலேயே அதிகமாக பவுலிங் செய்தது இந்திய அணிக்கு பின்னடைவாக மாறியது.
இதுகுறித்து இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் பேசுகையில், முதல் இன்னிங்ஸில் இந்திய பவுலர்களின் லெந்த் கொஞ்சம் ஒய்டாக இருந்தது உண்மை தான். ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை அதிகமாக பந்தை லீவ் செய்ய அனுமதித்துவிட்டோம். பிங்க் பால் டெஸ்ட் போட்டிகளில் எப்போதும் கடைசி செஷனில் தான் அதிகளவில் விக்கெட்டுகளை வீழ்த்தப்பட்டிருக்கின்றன.
முதல் நாளில் சில தவறுகளை செய்தாலும், 2வது நாள் ஆட்டத்தை அதனை சரி செய்து கொண்டோம். பார்ட்னர்ஷிப்பாகவும் சரியாக பவுலிங் செய்தோம் என்று நினைக்கிறேன். ஹர்சித் ராணாவை பொறுத்தவரை 2வது டெஸ்ட் போட்டியில் தான் விளையாடுகிறார். இது அவருக்கு மிகப்பெரிய பாடமாக இருக்கும். ஆஸ்திரேலியா மண்ணிலும் முதல்முறையாக விளையாடுவதால், அடுத்தடுத்து முன்னேற்றம் காண்பார்.
டெஸ்ட் கிரிக்கெட் எப்போதும் கடினமான வடிவம் தான். இந்த வடிவத்தில் இருந்து எந்த வீரராலும் தப்பிக்க முடியாது. ஹர்சித் ராணா 2வது டெஸ்ட் போட்டியில் தான் விளையாடுகிறார் என்பதால், இதுபோன்ற ஆலோசனைகளில் இருந்து அதிகமாக கற்றுக் கொள்வார். ஹர்சித் ராணாவின் தோள்களில் கைகளை போட்டு அவருடன் ஆலோசிப்பது தான் அடுத்த பணியாக இருக்கும். அவரின் திறமைகள் மீது எப்போதும் நம்பிக்கை வைத்துள்ள வீரராகவே அவர் இருக்க வேண்டும்.
ஒரு அணியாக அவருக்கு எப்போதும் ஆதரவு இருக்கு. அதேபோல் அவருடன் தொடர்ச்சியாக ஆலோசனை மேற்கொள்வோம். அவரின் பவுலிங்கில் இருந்தே ஏராளமான கேள்விகளை கேட்டு, புரிதலை ஏற்படுத்துவோம். இதுபோன்ற கடினமான நாட்களும் உதவியாக இருப்பதாக நினைக்கிறேன். ஏனென்றால் கஷ்டங்கள் அனுபவிப்பதே, அடுத்த லெவலில் முன்னேற்றம் அடைவதற்கான வழி என்று தெரிவித்துள்ளார்.