மும்பை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதல் 2 போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் என்பது தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாற்று கேப்டனாக செயல்படப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. நவம்பர் 22ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடர், ஜனவரி 8ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கு இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல் கடந்த 2 முறையும் இந்திய அணி ஆஸ்திரேலியா மண்ணில் வென்றிருப்பதால், இம்முறை மீண்டும் வென்று ஹாட்ரிக் வெற்றியை பெற வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இன்னொரு பக்கம் ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ், இந்திய அணியை வீழ்த்துவதற்கு தொடர்ந்து 8 வாரங்கள் ஓய்வில் இருந்து நேரடியாக களமிறங்க உள்ளார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பில்லை என்றும், சொந்த காரணங்களுக்கான விடுப்பு கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் பேசுகையில், ரோஹித் சர்மா விவகாரம் தொடர்பாக இன்னும் முழுமையாக தெரிய வரவில்லை.
ஆனால் ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்பது தொடர்பாக ரோஹித் சர்மா பிசிசிஐ நிர்வாகத்திடம் சில தகவல்களை கூறியுள்ளார். சொந்த காரணங்கள் காரணமாக ரோஹித் சர்மா, முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது. ஒருவேளை சொந்த விஷயங்கள், ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு முன்பாகவே முடிந்துவிட்டால், அவரால் 5 போட்டிகளிலும் விளையாட முடியும்.
இந்த விவகாரம் தொடர்பாக வரும் நாட்களில் முழுமையான தெளிவு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ரோஹித் சர்மா முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்றால், அவரது இடத்தில் துலீப் டிராபி மற்றும் இராணி கோப்பையில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிமன்யூ ஈஸ்வரன் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த நேரத்தில் இந்திய ஏ அணியின் கேப்டனான அபிமன்யூ ஈஸ்வரன் ஆஸ்திரேலியா மண்ணில் தான் இருப்பார். ஏனென்றால் இந்தியா ஏ அணி விரைவில் ஆஸ்திரேலியா ஏ அணியுடன் விளையாட பயணிக்கவுள்ளது. அதேபோல் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவும் வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.