சிட்னி: சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்திய அணியின் ஆட்டம் திருப்தியளிக்கவில்லை என்றால், தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கவுதம் கம்பீர் நீக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே கம்பீரின் பயிற்சியாளர் நியமனம் தொடர்பான சர்ச்சை முடிவடையாத சூழலில், திடீரென அவரின் பதவிக்கு ஆபத்து வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டார். அதன்பின் இந்திய அணி ஆடிய இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், சொந்த மண்ணில் ஆடிய நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் தோல்வியை சந்தித்தது. தற்போது பார்டர் கவாஸ்கர் டிராபியிலும் வெல்வதற்கு வாய்ப்பில்லாத நிலை வந்துள்ளது.

இதனால் கவுதம் கம்பீரிடம் இருந்து பிசிசிஐ தரப்பில் சில விளக்கங்கள் அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக வந்ததில் இருந்து இந்திய அணி வீரர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையில் தகவல் பரிமாற்றங்களில் சிக்கல் எழுந்திருப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட் பொறுப்பில் இருந்த போது வீரர்களுக்கு போதுமான தெளிவு அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இளம் வீரர்கள் பலருக்கும் இந்திய அணியில் இருந்து ஏன் நீக்கப்படுகிறோம், ஏன் பெஞ்ச் செய்யப்படுகிறோம் என்கிற விளக்கம் கூட அளிக்கப்படுவதில்லையாம். ஏற்கனவே அஸ்வின் ஓய்வு அறிவிப்புக்கு கம்பீரும் மறைமுக காரணமாக அமைந்துள்ளார்.
இந்த நிலையில் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக பார்க்கப்பட்ட சுப்மன் கில் பெஞ்ச் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சீனியர் வீரர்கள் எவ்வளவு சொதப்பினாலும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையையும் கம்பீர் தைரியமாக எடுப்பதில்லை. இந்த நிலையில் பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேசுகையில், பார்டர் கவாஸ்கர் டிராபியில் இன்னும் ஒரு டெஸ்ட் போட்டி விளையாட வேண்டியுள்ளது.
அதன்பின் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட வேண்டும். சாம்பியன்ஸ் டிராபியிலும் இந்திய அணியின் ஆட்டம் முன்னேறவில்லை என்றால், கம்பீரின் பதவிக்கு ஆபத்து வரலாம். அதேபோல் ராகுல் டிராவிட்டுக்கு பின் அடுத்த பயிற்சியாளருக்கான ரேஸில் கம்பீர் முதலிடத்தில் இல்லை. என்சிஏ தலைவராக இருந்த விவிஎஸ் லக்ஷ்மண் தான் அந்த பொறுப்புக்கு வரவிருந்தார்.
அதேபோல் சில வெளிநாட்டு பயிற்சியாளர்கள் 3 வடிவங்களுக்கும் பயிற்சியளிக்க முன்வரவில்லை. அதன்பின் சில சமரசங்கள் செய்யப்பட்டு, சில நிர்பந்தங்களுக்கு பின்னரே கம்பீர் பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டார் என்று தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கம்பீரின் பயிற்சியாளர்கள் குழுவில் இருக்கும் ஒருவர், எப்போதும் உதவியாளர் ஒருவருடன் வலம் வருவதையும் பிசிசிஐ கண்காணித்து வருகிறது.
அந்த உதவியாளர் ஒருமுறை இந்திய அணியின் பயிற்சியாளர் அரங்கிலும் அனுமதிக்கப்பட்டதாகவும், அதுவும் ஐபிஎல் அணியின் ஜெர்சியுடன் வலம் வந்ததும் தெரிய வந்திருக்கிறது. இதனால் சாம்பியன்ஸ் டிராபிக்கு பின் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று கருதப்படுகிறது.