மும்பை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிதீஷ் குமார் ரெட்டிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வாஷிங்டன் சுந்தரும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ள நிலையில், அக்டோபர் 29ஆம் தேதி டி20 தொடர் நடக்கவுள்ளது. இதன்பின் 2வது டி20 போட்டி அக்டோபர் 31ல் மெல்போர்ன் மைதானத்திலும், 3வது டி20 போட்டி நவ.2ல் ஹோபர்ட் மைதானத்திலும் நடக்கவுள்ளது.

தொடர்ந்து நவம்பர் 6ல் 4வது டி20 போட்டி கோல்ட் கோஸ்ட் மைதானத்திலும், கடைசி டி20 போட்டி நவம்பர் 8ல் பிரிஸ்பேன் மைதானத்திலும் நடக்க உள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசியக் கோப்பை தொடரில் ஆடிய அணிக்கும், தற்போதைய அணிக்கும் பெரிய மாற்றம் இல்லை.
ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகி இருக்கிறார். அதேபோல் ஹர்திக் பாண்டியா இடத்தில் நிதீஷ் குமார் ரெட்டி கொண்டு வரப்பட்டிருக்கிறார். அதேபோல் கூடுதலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்த முறையும் முகமது சிராஜ் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக மீண்டும் ஹர்சித் ராணாவுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்திய அணி ரசிகர்கள் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேபோல் விக்கெட் கீப்பர்களான சஞ்சு சாம்சன் மற்றும் ஜித்தேஷ் சர்மா இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் என்று 4 ஸ்பின்னர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்திய அணி விவரம்: சூர்யகுமார் யாதவ், அபிஷேக் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஜித்தேஷ் சர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், நிதீஷ் குமார் ரெட்டி, சிவம் துபே, குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா, பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங்.