சிட்னி: இந்திய அணியிடம் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இருப்பதால் ஆஸ்திரேலியா மண்ணில் அவர்களை வீழ்த்துவது சவாலான விஷயமாக இருப்பதாக ஆஸ்திரேலியா வீரர் மார்னஸ் லபுஷேன் தெரிவித்துள்ளார். ஆனால் இம்முறை நிச்சயம் இந்திய அணியை வீழ்த்த தீவிரமாக முயற்சிப்போம் என்று கூறியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் இன்னும் 2 மாதங்களில் தொடங்கவுள்ளது. நவம்பர் 22ஆம் தேதி முதல் தொடங்கும் இந்த டெஸ்ட் தொடர், ஜனவரி 8ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கு முன்பாக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பயணித்த 2 முறையும் கோப்பையுடன் திரும்பியது.

2018-19 பார்டர் கவாஸ்கர் டிராபியை 2-1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி, அதன்பின் 2021-22 தொடரை மீண்டும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது. அதிலும் காபா டெஸ்ட் போட்டி வெற்றி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான சம்பவமாகவே மாறியது. இதனால் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் பழிதீர்க்க இம்முறை தீவிரமாக உள்ளனர்.
இந்திய டெஸ்ட் தொடருக்கு தயாராகுவதற்காக ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் 8 வாரங்கள் ஓய்வில் இருந்து வருகிறார். அதேபோல் ஸ்டீவ் ஸ்மித், லபுஷேன், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், மிட்சல் மார்ஷ், கவாஜா, ஸ்டார்க், ஹேசல்வுட் உள்ளிட்டோரையும் ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் தீவிரமாக தயார் செய்து வருகிறது.
அதேபோல் இந்திய அணி வீரர்களை மன ரீதியாக பலவீனமடைய வைப்பதற்காக ஆஸ்திரேலியா அணி முன்னாள் வீரர்கள் பலரும் வார்த்தை விளையாட்டுகளை தொடங்கிவிட்டனர். ரிக்கி பாண்டிங், புக்கனன், கில்கிறிஸ்ட் உள்ளிட்ட ஏராளமான ஜாம்பவான்கள் ஆஸ்திரேலியா இம்முறை கோப்பையை வெல்லும் என்று கணிப்புகளை கூற தொடங்கியுள்ளனர்.
அதேபோல் இந்தியா தரப்பில் இருந்து சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி உள்ளிட்ட பலரும் ஆஸ்திரேலியாவின் கணிப்புகளுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பார்டர் கவாஸ்கர் டிராபி குறித்து ஆஸ்திரேலியா முன்னணி வீரர் லபுஷேன் பேசுகையில், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
அது ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணிக்கு கூடுதல் சாதகத்தை கொடுத்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணியை வீழ்த்துவது சவாலான ஒன்றாக மாறிவிட்டது. இம்முறை இந்திய அணியை அழுத்தத்திற்கு தள்ளி, நிச்சயம் தொடரை கைப்பற்றுவோம் என்று நம்புகிறேன். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இரண்டுமே உச்சக்கட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. இதனால் டெஸ்ட் தொடரை வெல்வது எளிதாக இருக்காது. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவோம் என்பது அனைவருக்கும் தெரியும்.
இதனால் இந்த இரு அணிகள் விளையாடும் போது களத்தில் இருக்கும் எனர்ஜியே வேற லெவலில் இருக்கும். இதன் காரணமாக ரசிகர்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 3 அணிகளில் எந்த 2 அணிகள் மோதினாலும் நிச்சயம் சிறந்த போட்டியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணி கோப்பையை வெல்லும் என்று லபுஷேன் கூறியிருப்பதன் மூலமாக கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.