சிட்னி: ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் போது முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா காயமடைந்தால் இந்திய அணிக்கு சிக்கல் ஏற்படும் என்று முன்னாள் வீரர் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார். முகமது ஷமி காயம் காரணமாக விலகியுள்ளதால், பும்ராவின் தோள்களில் அதிக சுமை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா மண்ணில் தொடர்ச்சியாக 2 முறை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றுள்ளதால், ஹாட்ரிக் வெற்றியை இந்திய அணி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறுவதும் இந்த தொடரின் வெற்றி மூலமாகவே உறுதி செய்யப்படும். இந்த நிலையில் சொந்த மண்ணில் நடந்து வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்திருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் பேசுகையில், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை நிச்சயமாக ஆஸ்திரேலியா அணி கைப்பற்றும். இந்த சமயத்தில் இந்திய அணியின் பேட்டிங்கும், போராடும் குணமும் குறைந்துள்ளது. அவர்களின் வலிமைக்கு ஏற்ப திறமையை வெளிப்படுத்துவதில்லை. அதேபோல் ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங்கும் பாராட்டும் அளவிற்கு இல்லை. ஆனால் ஆஸ்திரேலியா வீரர்களிடம் தரம் இருக்கிறது.
ஆனால் இந்திய அணியில் சீனியர்களே சொதப்பி வருகின்றனர். அதேபோல் முகமது ஷமி மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருபவர். அவர் இல்லாமல் இருப்பது நிச்சயம் இந்திய அணிக்கு பின்னடைவு தான். அதேபோல் பும்ராவின் தோள்களில் சுமை அதிகரித்துள்ளது. ஒருவேளை பும்ரா காயமடைந்தால், இந்திய அணி வீரர்களின் பாடு திண்டாட்டம் தான்.
அதுமட்டுமல்லாமல் நியூசிலாந்து அணி அவ்வளவு சிறந்த அணி கிடையாது. இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தும் அளவிற்கு நியூசிலாந்து அணியிடம் திறமை இல்லை. ஆனால் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு இந்திய அணியை வீழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளனர். அதனால் தான் இந்திய அணியை நினைத்து கவலைப்படுகிறேன்.
ஏனென்றால் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஏராளமான தவறுகளை செய்துள்ளது. நியூசிலாந்து போன்ற ஒரு அணியிடம் தவறு செய்தால், மொத்தமாக அவர்கள் ஆட்டத்தின் கட்டுப்பாட்டை எடுத்து கொள்வார்கள். இதனால் ஆஸ்திரேலியா மண்ணிலும் இந்திய அணியின் தவறு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.