மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, ஆசஸ் டெஸ்ட் தொடருக்கு பிறகு மிகப்பெரிய தொடர் என்றால் பார்டர் கவாஸ்கர் தொடர் தான். இந்தியா ஆஸ்திரேலியா மோதும் இந்த தொடர் ரசிகர்களால் பெரும் அளவில் ஆர்வத்துடன் பார்க்கப்படும்.கடந்த 10 ஆண்டுகளாக இந்த தொடரை ஆஸ்திரேலியா வெல்லவில்லை.
இதனால் எப்படியாவது இம்முறை கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற வெறியுடன் ஆஸ்திரேலிய வீரர்கள் இருக்கிறார்கள். அதே சமயம் இந்திய அணியோ நியூசிலாந்துக்கு எதிராக மிகப்பெரிய தோல்வியை தழுவி தற்போது துவண்டு போயிருக்கிறது.

ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் ஜடேஜா போன்ற வீரர்கள் தங்களது கடைசி டெஸ்ட் போட்டியை சொந்த மண்ணில் விளையாடிவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் மொத்தமாக கூட 100 ரன்களை அடிக்கவில்லை.
இந்த நிலையில் பார்டர் கவாஸ்கர் தொடர் தான் இவர்களுக்கு கடைசி வாய்ப்பு என்றும், இதில் சரியாக விளையாடவில்லை என்றால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவார்கள் என்றும் பி சி சி ஐ வட்டார தகவல் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் பார்டர் கவாஸ்கர் தொடர் பல இந்திய கிரிக்கெட் வீரர்களின் டெஸ்ட் வாழ்க்கையை காவு வாங்கி இருக்கிறது.அது யார் என்று தற்போது பார்க்கலாம்.
2008 இந்தியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக அணில் கும்ப்ளே தான் இருந்தார். ஆனால் அணில் கும்ப்ளே வை விட மற்ற சுழற் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். அணில் கும்ப்ளே அந்தத் தொடரில் ஒரு டெஸ்ட் போட்டியில் விக்கெட் எடுக்காமல் தடுமாறினார். இதனால் இனி நாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது சரி அல்ல என்று நினைத்து அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
இதேபோன்று கங்குலியும் அந்த தொடரில் அபாரமாக விளையாடினாலும் இளம் வீரர்களுக்கு வழி விட வேண்டும் என்ற நோக்கத்தில் ஓய்வு முடிவை அதே தொடரில் அறிவித்தார். இதேபோன்று 2012 -2013 ஆம் ஆண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி நான்குக்கு பூஜ்யம் என்ற கணத்தில் தொடரை இழந்தது. இதில் இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான ராகுல் டிராவிட், லட்சுமணன் ,சேவாக் ஆகியோர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.
அதன் பிறகு மூன்று பேரும் வேறு எந்த தொடரிலும் பங்கேற்கவில்லை. இதேபோன்று 2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தொடர் தோல்வி காரணமாக ஓய்வு முடிவை அறிவித்தார். இப்படி ஆறு இந்திய வீரர்களின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை பார்டர் கவாஸ்கர் தொடரில் தான் முடிந்தது. இந்த பட்டியலில் விராட் கோலி, அஸ்வின், ரோகித் சர்மா, ஜடேஜா இணைந்து விடுவார்களா என்று ரசிகர்கள் அச்சம் தெரிவித்து வருகிறார்கள்.