சிட்னி: கிரிக்கெட்டில் யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு சாதனையை செய்து இருக்கிறது இந்திய அணி. ஒரு அணியின் வெற்றி, தோல்வியை ஆடுகளத்தின் தன்மை மற்றும் டாஸ் தான் பல சமயங்களில் தீர்மானிக்கும். ஆனால், இந்திய கிரிக்கெட் அணிக்கு டாஸ் விஷயத்தில் மட்டும் அதிர்ஷ்டம் தொடர்ந்து கை கொடுக்க மறுக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய கேப்டன் சுப்மன் கில் டாஸ் தோற்றதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி தொடர்ச்சியாக 18வது முறையாகத் டாஸ்ஸில் தோல்வியடைந்த அணி என்ற மிக மோசமான உலக சாதனையை நீட்டித்துள்ளது.
சனிக்கிழமையன்று (அக்டோபர் 25) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்மூலம், இந்திய அணியின் டாஸ் தோல்விப் பயணம் தொடர்கதையாகியுள்ளது. இந்த நம்பமுடியாத நிகழ்வின் நிகழ்தகவு (Probability) 2,62,144-ல் ஒரு பங்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, 2,62,144 முறையில் ஒரு முறை மட்டுமே இது போல டாஸில் தொடர்ந்து 18 முறை தோல்வி அடைய முடியும்.

இந்திய அணியின் இந்தத் துரதிர்ஷ்டமான பயணம், 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தொடங்கியது. அன்றைய தினம், அப்போதைய கேப்டன் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ்ஸை இழந்தார். அன்று தொடங்கிய இந்தச் சங்கிலி, இன்று வரை அறுபடாமல் தொடர்கிறது.
உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தற்காலிக கேப்டனாகச் செயல்பட்ட கே.எல். ராகுல், மூன்று போட்டிகளிலுமே டாஸ் தோற்றார். அதன்பின், ரோஹித் சர்மா தனது கேப்டன்சியின் கீழ் தொடர்ச்சியாக 12 டாஸ்களை இழந்தார். இதன்மூலம், மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் கேப்டன் பிரையன் லாராவின் உலக சாதனையைச் சமன் செய்தார்.
கேப்டன்சி மாற்றம் செய்யப்பட்ட பிறகும், இந்தியாவின் தலைவிதி மாறவில்லை. புதிய ஒருநாள் கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தத் தொடரின் மூன்று போட்டிகளிலுமே டாஸ்ஸை இழந்துள்ளார்.
இதற்கு முன்பு, ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிக டாஸ் தோல்விகளைச் சந்தித்த அணியாக நெதர்லாந்து இருந்தது. அந்த அணி 2011 முதல் 2013 வரை தொடர்ச்சியாக 11 முறை டாஸ் தோற்றிருந்தது. பல ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த அந்த மோசமான சாதனையை, இந்திய அணி தற்போது 18 தோல்விகளாக நீட்டித்து, தனதாக்கியுள்ளது.
தொடரை ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் வென்றுவிட்ட ஆஸ்திரேலிய அணி, இந்த போட்டியிலும் வென்று தொடரை முழுமையாகக் கைப்பற்றும் (ஒயிட்வாஷ்) முனைப்பில் உள்ளது. மறுபுறம், இந்திய அணி இந்த நம்பமுடியாத டாஸ் துரதிர்ஷ்டத்தை மறந்து, போட்டியில் வென்று ஆறுதல் வெற்றியைப் பெறும் கட்டாயத்தில் களமிறங்கியுள்ளது.