சிட்னி: இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரிட் பும்ராவுடன் தேவையில்லாமல் மோதலில் ஈடுபட்டு தவறு செய்துவிட்டதாக ஆஸ்திரேலியா இளம் வீரர் சாம் கான்ஸ்டஸ் ஒப்புக் கொண்டுள்ளார். கவாஜா நேரத்தை கடத்துவதற்காக முயற்சி எடுத்த போது, அந்த ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்திய பும்ராவுக்கு பாராட்டுகளை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சிட்னி மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரிட் பும்ராவுடன் ஆஸ்திரேலியா அணியின் இளம் வீரர் சாம் கான்ஸ்டஸ் நேரடியான மோதலில் ஈடுபட்டார்.

நேரத்தை கடத்துவதற்காக கவாஜா முயற்சித்த போது, பும்ரா நேரடியாக அதிருப்தியை வெளிப்படுத்தினார். அப்போது திடீரென பும்ராவின் சைகையை பார்த்து டென்ஷனான சாம் கான்ஸ்டஸ் சில வார்த்தைகளை விட, அதனை பார்த்த பும்ரா நேராக கான்ஸ்டஸை நோக்கி நடக்க தொடங்கினார். இதன் பின் நடுவர்கள் இணைந்து இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
அந்த ஓவரின் கடைசி பந்திலேயே கவாஜா விக்கெட்டை வீழ்த்தி பும்ரா பதிலடி கொடுத்தார். பும்ரா விக்கெட் வீழ்த்திய அடுத்த நொடி ஒட்டுமொத்த இந்திய அணி வீரர்களும் சாம் கான்ஸ்டஸ் பக்கம் திரும்பி ஸ்லெட்ஜிங் செய்ய தொடங்கினர். இந்த சம்பவத்திற்கு பின் சாம் கான்ஸ்டஸ் தேவையின்றி சிக்கலில் மாட்டிக் கொள்ள கூடாது என்று ஆஸ்திரேலியா ஜாம்பவான்கள் பலரும் அட்வைஸ் செய்தனர்.
அதிலும் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், பும்ரா போன்ற ஒருவரிடம் தேவையின்றி வம்பு செய்யக் கூடாது என்று அறிவுறுத்தினார். இந்த விவகாரம் குறித்து சாம் கான்ஸ்டஸ் பேசுகையில், சிட்னி டெஸ்ட் போட்டியில் விளையாடியது ரொம்பவே ஸ்பெஷல். ஏனென்றால் கேன்சருக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட போட்டி அது. அதன் காரணமாக பிங்க் ஜெர்சியை அணிந்து விளையாடினோம்.
லுகேமியா காரணமாக தான் எனது நெருங்கிய உறவினரஒஇ இழந்தோம். என் தாத்தாவும் கேன்சர் நோய் காரணமாக தான் காலமானார். அதனால் தொடர்ச்சியாக பிங்க் பால் டெஸ்டில் விளையாட விரும்புகிறேன். இந்த டெஸ்ட் போட்டியில் நாங்கள் வென்றது மகிழ்ச்சியானது. அதேபோல் கவாஜா ஆட்டமிழந்த சூழல் குறித்து பலரும் பேசி வருகிறார்கள்.
அந்த நேரத்தில் நான் தவறு செய்துவிட்டேன். நேரத்தை கடத்துவதற்காக கவாஜா சில விஷயங்களை செய்தார். ஆனால் பும்ராவின் பவுலிங்கால் கவாஜா ஆட்டமிழந்தார். அதற்காக பும்ராவை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். இருந்தாலும் இந்த ஆட்டத்தில் ஒரு அணியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் என்று தெரிவித்துள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் 4 இன்னிங்ஸில் 113 ரன்களை கான்ஸ்டஸ் விளாசி இருக்கிறார். இதனால் நீண்ட மாதங்களாக ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.