அகமதாபாத்: உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது கிரிக்கெட் விளையாட்டிற்கே நன்மையை ஏற்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதன் மூலமாக ஆஸ்திரேலியா அணி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.

தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்களில் இலக்கை விரட்டி வெற்றிபெற்றது. அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட் 120 பந்துகளில் 138 ரன்களை விளாசி ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார். இந்திய அணியின் தோல்விக்கு அகமதாபாத் மைதானத்தில் அமைக்கப்பட்ட பிட்ச் தான் காரணம் என்று பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பயன்படுத்திய பிட்சை பயன்படுத்தியிருக்க கூடாது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இதன் காரணமாக சொந்த மண்ணில் இந்திய அணி தோல்வியடைந்ததாகவும், அதேபோல் களத்தில் ரோகித் சர்மா எடுத்த சில முக்கியமான முடிவுகள் இந்திய அணிக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியதாகவும் முன்னாள் வீரர்கள் காட்டமாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக சூர்யகுமார் யாதவை 7வது வரிசையில் களமிறக்கியது மோசமான முடிவாக அமைந்தது.
அதேபோல் வேகப்பந்துவீச்சாளர் சிராஜை சரியான நேரத்தில் அட்டாக்கில் கொண்டு வரவில்லை. இதனிடையே இந்திய அணியின் தோல்வியால் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் பேசுகையில், உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததன் மூலமாக கிரிக்கெட் வென்றுள்ளது.
ஒருவேளை இந்தியா வென்றிருந்தால், அது கிரிக்கெட் விளையாட்டிற்கே மிகவும் சோகமான ஒன்றாக அமைந்திருக்கும். இந்திய அணி சொந்த மண்ணில் ஆடியதால் பிட்ச் மற்றும் சூழல் அவர்களுக்கு சாதகமானதாக மாற்றி கொண்டனர். உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இப்படியொரு ஒரு மோசமான பிட்சை நான் பார்த்ததே இல்லை. இந்திய அணி தோல்விக்கு கிரிக்கெட் விளையாட்டுக்கே நன்மையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.