மும்பை : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வரும் 26 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த தொடரில் இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஆன பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலியா வீரர்கள் தடுமாறி வருகிறார்கள். பும்ரா மட்டும்தான் இந்தியாவின் பந்துவீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.

இந்த நிலையில் மிகவும் முக்கியமான டெஸ்ட் போட்டி தொடங்கப்பட உள்ள நிலையில் பும்ராவின் மனதை குலைக்கும் விதமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வர்ணனையாளர் இயான் மவுரிஸ் ஒரு மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், நான் பும்ரா பந்தை எறிவதாக கூறவில்லை.
ஆனால் அவர் பந்து வீசும் முறையில் தவறு இருக்கிறது. பந்து வீசும் போது அவருடைய கை கொஞ்சம் மாறி இருக்கிறது. இதை யாருமே கவனிப்பதில்லை. பும்ராவின் பந்துவீச்சு குறித்து நாம் கண்காணிக்க வேண்டும். இதை சொல்வதற்காக உடனே என்னுடைய தொண்டையை வந்து யாரும் கடிக்காதீர்கள். நான் அவர் பந்தை எறிவதாக குறை கூறவில்லை.
ஆனால் அவருடைய பந்து வீசும் முறையை கண்காணிக்க வேண்டும் என்று தான் மீண்டும் வலியுறுத்துகிறேன் என்று இயன் மவுரிஸ் கூறியிருக்கிறார். இயன் மவுரிஸின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பும்ரா பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலியா வீரர்கள் தடுமாறும் நிலையில் அவருடைய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் குலைப்பதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் சார்ந்த நபர்கள் இப்படி சர்ச்சையை கிளப்புவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பும்ராவின் பந்துவீச்சு முறையில் இதுவரை எந்த ஒரு குறையும் கண்டதில்லை என்றும், பும்ராவின் பந்துவீச்சு ஸ்டைலை ஏற்கனவே இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தொழிற்கல்வி நிறுவனமான ஐஐடி சோதித்து அவர் எப்படி அபாரமாக பந்து வீசுகிறார் என்பதை விளக்கி இருக்கிறது என்று ரசிகர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இவ்வாறு ஆஸ்திரேலியா கீழ்த்தரமாக நடந்து கொள்வதாக ரசிகர்கள் சாடி இருக்கிறார்கள்.