சிட்னி: இந்திய அணியின் கேப்டன் பும்ரா மற்றும் ஆஸ்திரேலியா அணியின் இளம் வீரரான சாம் கான்ஸ்டஸ் இருவரும் நேருக்கு நேர் மோதிய சம்பவம் அரங்கேறியுள்ளது. நேரத்தை கடத்துவதற்காக கவாஜா செய்த முயற்சிகள் பும்ராவுக்கு டென்ஷனை கொடுத்ததால், அவர் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது கான்ஸ்டஸ் திடீரென பும்ராவை வம்புக்கு இழுக்க, அடுத்த 2வது பந்திலேயே இந்திய கேப்டன் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 40 ரன்களை சேர்த்தார். ஆஸ்திரேலியா அணி தரப்பில் போலண்ட் 4 விக்கெட்டுகளையும், மிட்சல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்பின் கடைசி 15 நிமிடங்கள் இந்திய அணிக்கு பவுலிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் ஆஸ்திரேலியா அணி தரப்பில் சாம் கான்ஸ்டஸ் - உஸ்மான் கவாஜா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. பும்ரா வீசிய முதல் பந்திலேயே இறங்கி வந்து கான்ஸ்டஸ் பவுண்டரி அடித்தார். அந்த ஓவரின் 4வது பந்தில் பும்ரா வீசிய பந்து கவாஜாவின் பேட்டில் அடித்தது.
ஆனால் கவாஜா திடீரென விரலை பிடித்து கொண்டு பிசியோதெரபிஸ்டை அழைத்தார். இதன் மூலமாக கவாஜா நேரத்தை கடத்துவதற்காக முயற்சிக்கிறார் என்பது புரிந்து கொள்ளப்பட்டது. இதன்பின் மீண்டும் 3வது ஓவரை வீச பும்ரா வந்தார். அந்த ஓவரின் 5வது பந்தை வீசுவதற்கு பும்ரா தயாராகி 2 அடிகள் ஓட தொடங்கிய போதும் கூட, கவாஜா பேட்டிங் செய்ய தயாராகாமல் நின்று கொண்டிருந்தார்.
இதனால் நடுவர் திரும்பி பும்ராவை நிறுத்த, உடனடியாக பும்ரா கைகளை உயர்த்தி "என்ன இது" என்பதை போல் டென்ஷனில் சுட்டிக் காட்டினார். அப்போது அம்பயர் அருகில் நின்று கொண்டிருந்த இளம் வீரரான சாம் கான்ஸ்டஸ், உடனடியாக பும்ராவை வம்புக்கு இழுத்து மீண்டும் டென்ஷன் செய்தார். இதற்கு பும்ரா, "உன் இடத்தில் அமைதியாக நில்" என்று சைகை காட்ட, சூழல் பரபரப்பானது.
இதன் மூலமாக ஆஸ்திரேலியா அணி ஒரேயொரு பந்துடன் ஓய்வறைக்கு திரும்ப முடியும் என்று கணிக்கிட்டது. ஆனால் அந்த ஓவரின் கடைசி பந்திலேயே கவாஜாவின் விக்கெட்டை பும்ரா தூக்கினார். பும்ரா வீசிய ஃபுல்லர் பந்தை எதிர்கொள்ள முடியாமல் கவாஜா அடித்த ஷாட் நேராக ஸ்லிப்பில் நின்ற கேஎல் ராகுல் கைகளில் தஞ்சமடைந்தது.
இதனால் கவாஜா 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் பும்ரா உடனடியாக கான்ஸ்டஸ் பக்கம் திரும்பி ஆக்ரோஷமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். பும்ராவின் கொண்டாட்டத்தின் மூலமாகவே, "கவாஜா விக்கெட்டை காப்பாற்ற தானே என்னுடன் மோதினாய்.. கதை முடிந்தது போ" என்று சொல்வதை போல் இருந்தது. இதனால் வேறு வழியின்றி கான்ஸ்டஸ் அமைதியாக சென்றார். இதனால் முதல் நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலியா அணி 9 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து ஓய்வறைக்கு திரும்பியது.