சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மிக மோசமாக செயல்பட்டார்கள். பும்ரா மட்டுமே தனி ஆளாக தனது வேகப் பந்துவீச்சு திறமையின் மூலம் இந்திய அணியை வெற்றி பெற வைக்க போராடினார். ஆனால், அவரது போராட்டம் தோல்வியிலேயே முடிந்தது.
பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்காததால் ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய அழுத்தம் ஏற்படவில்லை. அதனால், மற்ற பவுலர்களும் விக்கெட்டுகளை வீழ்த்தாததால் அதிக ஓவர்களை வீச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் பும்ரா. இந்த தொடரின் மூன்றாவது போட்டியின் முடிவில் பும்ராவின் முதுகெலும்பை இந்திய பேட்ஸ்மேன்கள் உடைக்கிறார்கள் என ஒரு பேச்சுக்கு சொல்லப்பட்டது.

ஆனால், ஐந்தாவது போட்டியில் உண்மையாகவே பும்ரா முதுகு வலியால் அவதிப்பட்டு பந்து வீச முடியாத நிலைக்கு சென்றார். இந்த தொடரின் முதல் போட்டியில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றது. அதிலும் அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும் தான் இந்திய அணியின் பேட்டிங் சொல்லிக் கொள்ளும்படி இருந்தது.
மற்ற 4 போட்டிகளில் இந்திய அணியின் பேட்டிங் மொத்தமாக சொதப்பியது. பிரிஸ்பேனில் நடந்த மூன்றாவது போட்டி டிராவில் முடிவடைந்தது. அதுவும்கூட மழையின் உதவியால் தான். அந்த அளவுக்கு தான் இருந்தது இந்திய அணியின் பேட்டிங். இரண்டாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக ரன் குவிக்காததால் ஆஸ்திரேலிய அணிக்கு பவுலிங்கில் அதிக அழுத்தத்தை கொடுக்க முடியவில்லை. பும்ராவை தவிர்த்து மற்ற பந்துவீச்சாளர்களும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. எனவே, பும்ரா அதிக ஓவர்களை வீசியதன் விளைவாக ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவருக்கு முதுகில் தசை பிடிப்பு ஏற்பட்டது.
அதனால் பும்ராவால் அப்போது பந்து வீச முடியவில்லை. ஐந்தாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் மட்டுமே பும்ரா பத்து ஓவர்கள் வீசினார். இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பந்து வீசவில்லை. அவரது இந்த நிலைக்கு காரணம் இந்திய பேட்ஸ்மேன்கள் தான் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அடுத்து சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் நடைபெற உள்ள நிலையில் பும்ராவால் அந்த தொடரில் பங்கேற்க முடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.