மும்பை : ஒரே ஒரு வீரரை நம்பி ஒட்டுமொத்த அணியும் இருப்பதை என் வாழ்நாளில் தற்போது தான் பார்க்கிறேன் என இந்திய கிரிக்கெட் அணியை முகமது கைஃப் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதில் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 14ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் தொடங்குகிறது.

இந்த நிலையில் இந்திய அணி குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கையிஃப், தற்போது இந்திய அணி ஒரு போட்டியில் தான் தோல்வியை தழுவி இருக்கிறது. இதனால் யாரும் பதற்றப்படத் தேவையில்லை. நமது அணி சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் நாம் அனைத்தையுமே தோற்று விட்டோம் என்பது போல் தற்போது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இது தேவையற்றது! எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு நாம் சிறப்பான முறையில் தயாராக வேண்டும். இன்னும் நல்ல யுக்திகளை நாம் வகுக்க வேண்டும். ரோகித் சர்மா கேப்டனாக சரியாக செயல்படவில்லை. அதேசமயம் பும்ராவை மட்டுமே இந்திய அணி நம்பி இருக்கிறது. பும்ராவுக்கும் நாம் நீண்ட நேரம் ஓவர் வழங்க முடியாது.
தற்போது இந்திய அணியில் அவர் ஒருவர் மட்டும்தான் பவுலர் இருக்கிறார் என்பது போல் தெரிகிறது. என் வாழ்நாளில் ஒரே ஒரு வீரரை நம்பி ஒட்டுமொத்த அணியும் இருந்ததை நான் பார்த்ததே இல்லை. அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தற்போது பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவதில்லை.
ஒருவேளை பும்ராவுக்கு காயம் ஏற்பட்டு விட்டால், இந்த தொடரை நாம் மறந்துவிட வேண்டும். இதன் காரணமாக தான் ரோகித் சர்மா அவருக்கு சிறிது சிறிது அளவாக ஓவர்களை வழங்குகிறார். இந்திய அணி நிர்வாகம் பும்ராவை கண்காணித்து அவர்களுடைய பணி சுமையை குறைக்க வேண்டும் என்று முகமது கைப் கூறியுள்ளார். சிராஜ் திறமையான பவுலராக இருந்தாலும் அவர் இன்னும் ஷமி, பும்ரா அளவுக்கு செயல்படவில்லை என்றும் முகமது கைஃப் விமர்சித்து இருக்கிறார்.