மெல்போர்ன்: இந்திய அணியின் துணைக் கேப்டன் ஜஸ்பிரிட் பும்ரா அளித்த சிறிய ஆலோசனை மிகப்பெரிய உதவியாக இருந்ததாக இளம் வீரர் ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா மண்ணில் முதல்முறையாக விளையாடுவதாக கூறிய அவர், பவுலர்கள் பந்தை சரியான லெந்தில் வீசினாலே போதுமானது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி வரும் 26ஆம் தேதி நடக்கவுள்ளது. இதுவரை நடந்த 3 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் இருப்பதால், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்கிய ஆகாஷ் தீப், மெல்போர்ன் போட்டியிலும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் முதல் இன்னிங்ஸில் விக்கெட்டுகள் வீழ்த்தவில்லை என்றாலும், அவரின் பவுலிங் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை திணறடித்தது. அதேபோல் பேட்டிங்கில் கொஞ்சம் கூட அழுத்தத்தை காட்டாமல் சிறப்பாக ஆடி இந்திய அணியை காப்பாற்றினார். இதன் பின் 2வது இன்னிங்ஸில் ஆகாஷ் தீப் அசத்தலாக பவுலிங் செய்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த நிலையில் மெல்போர்னில் பயிற்சியை முடித்து செய்தியாளர்களை சந்தித்து ஆகாஷ் தீப் பேசுகையில், முதல்முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடுகிறேன். அதனால் ஜஸ்பிரிட் பும்ரா சிறிய ஆலோசனைகளை வழங்கினார். அது எனக்கு மிகப்பெரிய உதவியாக அமைந்தது. எப்போதும் ஜஸ்பிரிட் பும்ரா எந்த விஷயத்தையும் குழப்பிக் கொள்ள மாட்டார்.
அவர் என்னிடம், எந்த விஷயத்திற்கும் அதிகமாக ரியாக்ட் செய்ய வேண்டாம். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவும் வகையில் தான் பிட்ச் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய மண்ணில் எப்படி பவுலிங் செய்வாயோ, அதேபோல் இங்கு பவுலிங் செய்யலாம் என்று அறிவுறுத்தினார். ஆனால் ஆஸ்திரேலியா மண்ணில் பவுலிங் செய்வது கொஞ்சம் கடினமானது என்று நினைக்கிறேன்.
நான் இதுவரை இந்தியாவில் மட்டுமே விளையாடி இருக்கிறேன். அங்குள்ள பிட்சில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பெரிய உதவிகள் கிடைக்காது. அதனால் எங்களின் லெந்தை கொஞ்சம் ஷார்டாக வைத்து கொள்வோம். ஆனால் ஆஸ்திரேலியாவில் புதிய பந்தில் அதிகமாக பிட்ச் உதவி செய்கிறது. அதேபோல் சில நேரங்களில் சிறப்பாக பவுலிங் செய்தாலும், விக்கெட்டுகள் கிடைக்காது.
அந்த நேரத்தில் ஃபுல்லர் லெந்தில் பவுலிங் செய்யலாம் என்று தோன்றும். ஆனால் ஒரு வேகப்பந்துவீச்சாளராக கட்டுப்பாட்டுடன் பவுலிங் செய்ய வேண்டும். காபா டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்தை அதிகமாக திணறடிக்க முடிந்தது. ஆனாலும் எனக்கு விக்கெட் கிடைக்கவில்லை. அப்போது எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று நினைத்து கொண்டேன். ஆனால் பவுலர்களின் கைகளில் இவை இல்லை. சரியான லெந்தில் பவுலிங் செய்வது மட்டுமே நம் கைகளில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.