சிட்னி: இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரிட் பும்ராவின் காயம் குறித்து இளம் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி பும்ராவுக்கு முதுகு பிடிப்பு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பில் பும்ரா இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா தனியாளாக போராடி வருகிறார். இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஜஸ்பிரிட் பும்ரா மொத்தமாக 151.2 ஓவர்கள் வீசி 32 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இதன் மூலமாக ஆஸ்திரேலியா மண்ணில் ஒரே டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்த நிலையில் சிட்னி மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பையும் பும்ரா ஏற்றுள்ளார். இந்த போட்டியின் 2வது நாள் ஆட்டத்தின் போது பும்ரா 8 ஓவர்களை மட்டுமே வீசிய நிலையில், ஓய்வறைக்கு திரும்பினார். அதிலும் உணவு இடைவேளைக்கு பின் ஒரேயொரு ஓவரை மட்டும் வீசிய பும்ரா, உடனடியாக ஓய்வறைக்கு சென்றார்.
இதனால் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டதா என்று ரசிகர்கள் சந்தேகம் அடைந்தனர். அந்த சந்தேகத்திற்கு ஏற்ப, பும்ரா உடனடியாக இந்திய அணி மருத்துவர்களுடன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சரியாக 3 மணி நேரம் 20 நிமிடங்கள் வரை பும்ரா களத்திற்கு திரும்பவில்லை.
தொடர்ந்து இந்திய அணியின் பேட்டிங்கின் போது ஸ்கேன் பரிசோதனை செய்துவிட்டு பும்ரா ஓய்வறைக்கு திரும்பினார். அப்போது சாதாரணமாக மற்ற வீரர்களுடன் பேசி கொண்டிருந்த பும்ரா, நடக்கும் போது எந்த சிக்கலும் ஏற்பட்டதாக தெரியவில்லை. இதனால் பும்ராவின் காயம் குறித்து தெளிவான தகவல்களை வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் 2வது நாள் ஆட்டத்திற்கு பின் இந்திய அணியின் பிரசித் கிருஷ்ணா பேசுகையில், பும்ராவுக்கு முதுகு பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய அணியின் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார். இதனால் நாளைய ஆட்டத்தில் இந்திய அணிக்காக பவுலிங் செய்ய பும்ரா களமிறங்குவாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
முதல் இன்னிங்ஸின் போது பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டு வெளியேறிய பின், உடனடியாக சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் அசத்தலாக பவுலிங் செய்து அசத்தினர். ஆனால் 2வது இன்னிங்ஸில் இந்திய அணி சிறிய இலக்கை நிர்ணயித்தால், பும்ரா பவுலிங் அத்தியாவசிய தேவையாக மாறிவிடும். இதனால் ஸ்கேன் ரிப்போர்ட் அடிப்படையில் பும்ரா விளையாடுவது குறித்து முடிவு எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.