சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் பும்ரா அந்த அணியின் 19 வயது வீரரான கோன்ஸ்டாஸ் இடம் கோபமாக நடந்து கொண்டது,ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
பொதுவாக பும்ரா களத்தில் எப்போதுமே அமைதியாக இருப்பார். விக்கெட்டை எடுத்தால் கூட பெரிய அளவில் கத்த மாட்டார். மேலும் பேட்ஸ்மேன்களை பெரிய அளவில் இதுவரை சீண்டியது கிடையாது. ஆனால் கோன்ஸ்டாஸ் பும்ராவை வம்பு இழுத்து பேசியதால் அவர் கடும் கோபத்திற்கு ஆளானார்.

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஏற்கனவே கோன்ஸ்டாஸ்க்கு பும்ரா பதிலடி கொடுத்த நிலையில், சிட்னி டெஸ்டிலும் கோன்ஸ்டாஸ் வாலை ஆட்டினார். இது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பும்ரா தாம், ஏன் பெரிய அளவில் பேட்ஸ்மேனை சீண்டியதில்லை என்பது குறித்து பேசிய நேர்காணல் தற்போது வைரல் ஆகி வருகிறது.
அதில் நான் களத்தில் ஆக்ரோஷமாகத்தான் இருப்பேன். ஆனால் பேட்ஸ்மேன்களை வம்பு இழுக்க மாட்டேன். நான் சிறுவயதில் தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டிகளை பார்க்கும்போது, பௌலர்கள் தேவையில்லாமல் கத்தி பேட்ஸ்மேன்கள் சீண்டுவார்கள். அதை பார்த்து நானும் பின்பற்றினேன்.
ஆனால் அது எனக்கு சரிப்பட்டு வரவில்லை. அது என்னுடைய கிரிக்கெட் போட்டியையும் பாதித்தது. நான் கோபப்பட்டால் வரம்பு மீறி செயல்படுகிறேன் என்பதை உணர்ந்தேன். இதனால் களத்தில் ஆக்ரோஷமாக கத்தக்கூடாது என்று என்னை நானே அமைதியாக்கி கொண்டேன். நான் களத்தில் அமைதியாகவும் ரிலாக்ஸ் ஆகவும் இருக்கும் போது தான் நான் நன்றாக விளையாடுகிறேன்.
நான் அப்படி இருக்கும்போது என் மண்டையில் என்ன ஓடுகிறது என்று பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியாது. எனவே அது எனக்கு மன ரீதியில் சாதகமாக இருந்தது. களத்தில் அமைதியாக இருப்பதன் மூலம் நல்ல முடிவு எடுக்க அது உதவிகரமாக இருந்தது. நான் பேட்ஸ்மேன் மீது பந்துகளை எரிய வரவில்லை. நான் என் அணியின் வெற்றிக்காக தான் இங்கு வந்திருக்கிறேன்.
என்னுடைய ஆக்ரோஷம் எல்லாம் நான் பந்து வீசும் முறையில் தான் இருக்கும். ஆனால் நான் களத்தில் கோபப்பட மாட்டேன் என்று பொய் சொல்ல விரும்பவில்லை. அப்படி நடந்தால் அதற்கு ஆரம்ப புள்ளியாக நான் இருந்திருக்க மாட்டேன். என்னை யாராவது சீண்டினால் நானும் அமைதியாக எல்லாம் செல்ல மாட்டேன்.அப்படிதான் நான் கிரிக்கெட்டை விளையாட தொடங்கினேன். ஒரு மோதலை ஆரம்பிப்பது என்பது எனக்கு சுலபமானது. ஆனால் நான் அதை வேண்டுமென்றே தவிர்த்து வருகிறேன் என்று பும்ரா கூறியுள்ளார்.