பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி யாருமே எதிர்பார்க்காத வகையில் 295 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்றுவிட்டது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த சூழலில் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த பும்ராவை முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் பாராட்டி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், பும்ரா செயல்பட்ட விதம் அவர் வீசியதிலே சிறந்த பந்துகளாக அமைந்தது.

நான் இதை மிகைப்படுத்தி சொல்லவில்லை. குறிப்பாக டிராவிஸ் ஹேட் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தார். ஆடுகளமும் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறிக் கொண்டிருந்தது. ஆனால் பும்ரா இந்திய கிரிக்கெட்டில் கேட்டதை எல்லாம் வழங்கும் பூதம் போல் இருக்கின்றார். உங்களுக்கு ஏதேனும் தேவை என்றால் அதை நிச்சயம் பும்ரா பூர்த்தி செய்து விடுவார்.
இதுபோன்ற ஒரு ஆடுகளத்தில் பும்ரா எப்படி பந்து வீசி அற்புதங்களை நிகழ்த்துகிறார் என்று நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது. டிராவிஸ் ஹெட், ஸ்மித் பார்ட்னசிப்பை பும்ரா தன்னுடைய அபாரமான திறமையால் மட்டுமே உடைத்தார். நிச்சயம் அந்த பார்ட்னர்ஷிப்பால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருக்காது.
எனினும் டிராவிஸ் ஹெட், களத்தில் நின்று ஆடுவதை பார்க்கும் போது இந்திய ரசிகர்களுக்கு நிச்சயம் கடுப்பாக இருந்திருக்கும். அவருடைய விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி மீண்டும் போட்டிக்குள் வந்தது என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் பும்ராவை பாராட்டி இருக்கிறார்.
இந்த நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறுகிறது. 10 நாட்கள் என்று இருப்பதால் இந்தியாவுக்கு ஒரு நல்ல ஓய்வு கிடைத்திருக்கிறது. எனினும் இந்திய அணி இம்மாதம் இறுதியில் இரண்டு நாள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் பங்குபெறும். தற்போது இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவும் திரும்பி இருப்பதால் பும்ரா துணை கேப்டன் ஆக மட்டுமே அடுத்த டெஸ்ட் போட்டியிலிருந்து செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.