சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரிட் பும்ரா காயமடைந்து ஓய்வறைக்கு திரும்பினார். இதன்பின் ஓய்வறையில் இருந்து திடீரென இந்திய அணி நிர்வாகிகளுடன் ஸ்கேன் பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நீக்கப்பட்ட நிலையில், அந்த பொறுப்பு பும்ரா வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன்பின் முதல் நாள் ஆட்டத்தில் களமிறங்கிய இந்திய அணி 185 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 9 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது.

தொடர்ந்து இன்று தொடங்கிய 2வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆஸ்திரேலியா அணி 137 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இன்றைய ஆட்டத்தை லபுஷேன் விக்கெட்டை பும்ரா வீழ்த்திய நிலையில், அதன்பின் மொத்தமாக 7 ஓவர்களை மட்டுமே வீசியிருந்தார். அவ்வப்போது ஓய்வறைக்கு சென்று வந்ததால், விராட் கோலி கேப்டன்சியை மேற்கொண்டார்.
தொடர்ந்து உணவு இடைவேளைக்கு பின் பும்ரா பவுலிங் செய்ய வந்தார். அப்போது ஒரேயொரு ஓவரை மட்டும் பும்ரா வீசிய நிலையில், திடீரென மீண்டும் ஓய்வறைக்கு சென்றார். இது இந்திய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் வரையிலும் கூட பும்ரா களத்திற்கு திரும்பாததால், ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.
பும்ராவுக்கு பதிலாக சர்ஃபராஸ் கான் களத்திற்கு வந்தார். இந்த நிலையில் ஓய்வறையில் இருந்த பும்ரா, இந்திய அணி நிர்வாகிகளுடன் ஸ்கேன் பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். தொடர்ந்து பும்ரா மருத்துவருடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் காட்சியும் ஒளிபரப்பப்பட்டது.

பும்ரா காயமடைந்தது தொடர்பான முழு விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஒருவேளை அடுத்த 3 நாட்களில் பும்ராவால் விளையாட முடியவில்லை என்றால், இந்திய அணிக்கு மிகப்பெரிய சிக்கல் எழும். ஏனென்றால் இந்த டெஸ்ட் தொடரில் பும்ரா மட்டுமே இந்திய அணிக்காக தனியாளாக போராடி வந்துள்ளார். 9 இன்னிங்ஸில் விளையாடி 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டுமென்றால் பும்ரா கட்டாயம் அடுத்த இன்னிங்ஸில் களமிறங்கியாக வேண்டும். ஒருவேளை தோல்வியடைந்தால், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ரேஸில் இருந்தும் வெளியேறும். இதனால் ரசிகர்கள் பும்ரா திரும்பி வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய தொடங்கியுள்ளனர்.