மும்பை: இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் ரோகித் சர்மா ஒரேயொரு தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் ரோகித் சர்மா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் இப்போதே பேச தொடங்கியுள்ளனர்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற போதும், ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது அவரின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் 2027ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் மட்டுமே இருக்கும் நிலையில், புதிய அணியை கட்டமைக்க புதிய கேப்டனுக்கான கால அவகாசம் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. இதனால் சுப்மன் கில் கேப்டனாக நியமனம் செய்யப்படுவதாக அஜித் அகர்கர் தெரிவித்திருக்கிறார்.
அதேபோல் 2027ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் விளையாட ரோகித் சர்மா முனைப்பு காட்டவில்லை என்றும் சில வார்த்தைகளை விட்டுள்ளார். ரோகித் சர்மாவுக்கு 38 வயதாகும் சூழலில், உலகக்கோப்பைத் தொடரில் விளையாட வேண்டுமென்றால், அப்போது 40 வயதை எட்டிவிடுவார். அப்போது ரோகித் சர்மா முழு ஃபிட்னஸ் உடன் இருப்பாரா என்ற சந்தேகம் உள்ளது.
இதனால் அடுத்த ஆண்டிற்குள் ரோகித் சர்மாவை ஒருநாள் அணியில் இருந்து வெளியேற்றும் முடிவுக்கு பிசிசிஐ வரலாம் என்று பார்க்கப்படுகிறது. அப்படி நடக்க கூடாது என்றால், ஒவ்வொரு ஒருநாள் தொடரிலும் ரோகித் சர்மா மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. ஒருவேளை ரோகித் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஒரு தொடரில் ஏமாற்றம் அளித்தால், பிசிசிஐ நடவடிக்கை பாய்வது உறுதி.
இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வென்று கொடுத்த கேப்டன் ரோகித் சர்மாவை அவமானப்படுத்தி பிசிசிஐ வெளியேற்றும் சூழல் உருவாக வாய்ப்புள்ளது. அதேபோல் இந்திய அணியில் இருந்து வெளியேற்றும் முடிவை பிசிசிஐ எடுக்கும் பட்சத்தில், ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தே ஓய்வை அறிவிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.