மும்பை: ஆஸ்திரேலியா மண்ணில் விராட் கோலி ரன்கள் வேட்டையாடுவார் என்று இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். விராட் கோலி கடந்த சில போட்டிகளாகவே ரன்கள் சேர்க்க ஆர்வமாக இருப்பதை கூறியுள்ள ரவி சாஸ்திரி, ஆஸ்திரேலியா மண்ணில் நிதானமாக விளையாடும் போது வேற மாதிரி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும் கூறியுள்ளார்.
வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி வெறும் ஒரேயொரு அரைசதம் மட்டுமே சேர்த்தார். இந்திய மண்ணில் ஸ்பின்னர்களுக்கு எதிரான விராட் கோலி மோசமாக விளையாடி விக்கெட்டை பறிகொடுத்ததும் விமர்சனத்தை அதிகரித்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியா மண்ணில் விராட் கோலி ரன்கள் சேர்ப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் ஆஸ்திரேலியா மண்ணில் விராட் கோலி எப்போதும் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். 2011-12ல் ஆஸ்திரேலியா மண்ணில் 692 ரன்களை விளாசிய விராட் கோலி, 2014 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் பயணம் மேற்கொண்ட போதும் அபாரமாக விளையாடி சதங்களை விளாசி இருக்கிறார். அதிலும் 2018ஆம் ஆண்டு பெர்த் மைதானத்தில் அடித்த சதம் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசுகையில், சிங்கம் மீண்டும் தன்னுடைய கோட்டைக்கு வந்திருக்கிறது. அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும். ஏற்கனவே ஆஸ்திரேலியா மண்ணில் விராட் கோலி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பதால், அவர்களின் மனதிற்கு விராட் கோலியால் நன்றாக தெரியும்.
அதனால் இம்முறையும் விராட் கோலி எதிரணியின் மனநிலையில் நிச்சயம் கலக்கத்தை ஏற்படுத்துவார். சில நேரங்களில் நமக்கு வயதாகி கொண்டே போகும் போது, உடல் மற்றும் மனதளவில் கூடுதல் உற்சாகம் ஏற்படும். அதுதான் விராட் கோலி நடந்து வருகிறது. சில நேரங்களில் முதல் அடியை கொடுக்க ஆவலாக இருக்கும் போது, நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது முதல் அரை மணி நேரம் மிகவும் நிதானமாக இருக்க வேண்டும். ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் விராட் கோலி முதல் 3 இன்னிங்ஸ்களில் களமிறங்கும் போது கொஞ்சம் நிதானமாக பேட்டிங் செய்ய வேண்டும். மனதளவில் ரன்கள் சேர்க்க அவசரம் காட்டக் கூடாது. அவரின் அணுகுமுறையில் பேட்டிங் செய்தால், விராட் கோலியால் நிச்சயம் சிறப்பாக விளையாட முடியும் என்று தெரிவித்துள்ளார்.