அதிர்ச்சி முடிவு
பேட்டிங் வரிசையை சீராக்க முதல் போட்டியில் அதிக ரன் குவித்த ஷிகர் தவானை நீக்கும் அதிர்ச்சி முடிவை கேப்டன் கோலி எடுப்பார் என கூறப்படுகிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
மூன்று துவக்க வீரர்கள்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா பேட்டிங் வரிசையை மாற்றி அமைத்து பரிசோதனை செய்தது. நல்ல பார்மில் இருப்பதால் ரோஹித் சர்மா, தவான், கேஎல் ராகுல் என மூன்று துவக்க வீரர்களையும் களமிறக்கியது.
திட்டம்
வழக்கமாக மூன்றாம் வரிசையில் களமிறங்கும் விராட் கோலி, மூன்று துவக்க வீரர்களுக்கும் முதல் மூன்று இடங்களை கொடுத்து, தான் நான்காம் வரிசையில் களமிறங்கினார். அந்த திட்டம் சரியாக அமையவில்லை.
மிடில் ஆர்டர் சொதப்பல்
ரோஹித் 10 ரன்கள் மட்டுமே எடுக்க தவான் 74, ராகுல் 47 ரன்கள் குவித்தனர். ஆனால், அதன் பின் மிடில் ஆர்டரால் அதன்பின் சமாளித்து ஆடமுடியவில்லை. கோலி நான்காம் வரிசையில் பேட்டிங் செய்து 16 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
படு தோல்வி
முதல் போட்டியில் இந்தியா 255 ரன்கள் மட்டுமே எடுக்க, ஆஸ்திரேலியா 256 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எளிதாக எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணியில் அதிக ரன்கள் அடித்த வீரர் ஷிகர் தவான் தான்.
ரிஷப் பண்ட் காயம்
இரண்டாம் போட்டியில் பேட்டிங் வரிசையை சீரமைத்தால் தவான் நிச்சயம் தன் இடத்தை இழக்க நேரிடும் என கூறப்படுகிறது. காரணம், அணியின் சமநிலை தான். ரிஷப் பண்ட் முதல் போட்டியில் காயம் அடைந்ததும் ஒரு முக்கிய காரணம்.
ராகுல் தான் கீப்பர்
ரிஷப் பண்ட் பந்து ஹெல்மட்டில் தாக்கியதால் மூளை அழற்சி ஏற்பட்டு ஓய்வில் இருக்கிறார். அவர் இரண்டாவது போட்டியில் ஆட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இல்லாத நிலையில், துவக்க வீரர் ராகுல் தான் விக்கெட் கீப்பிங் பணியை செய்ய வேண்டும்.
கூடுதல் பந்துவீச்சாளர் வேண்டும்
அடுத்து பந்துவீச்சில் முதல் போட்டியில் கூடுதல் பந்துவீச்சாளர் இல்லாமல் ஐந்து பந்துவீச்சாளர்களோடு களமிறங்கியது இந்திய அணி. அந்த தவறை சரி செய்ய, இரண்டாம் போட்டியில் நிச்சயம் ஜாதவ் அல்லது சிவம் துபே இருவரில் ஒரு ஆல் - ரவுண்டரை அணியில் சேர்க்க வேண்டும்.
இருவரில் ஒருவர்?
மூன்று துவக்க வீரர்களில் ராகுல் நிச்சயம் அணியில் இடம் பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆல்-ரவுண்டர் ஒருவர் கூடுதலாக சேர்க்க வேண்டி இருப்பதால், ரோஹித் சர்மா - தவான் இருவரில் ஒருவர் மட்டுமே களமிறங்க முடியும் என்ற நிலை உள்ளது.
தவான் நீக்கம்?
ரோஹித் சர்மா முதல் போட்டியில் தடுமாறினாலும், அவர் தன் வாழ்வின் சிறந்த பார்மில் இருக்கிறார். 2019ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் மற்றும் அதிக ரன்கள் அடித்த வீரராக திகழ்ந்தார். எனவே, அவரை அணியில் சேர்த்து, தவானை நீக்கவே கேப்டன் கோலி முடிவு செய்வார் என கூறப்படுகிறது.