சிட்னி: டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களமிறங்குவதை சக வீரர்களாக உஸ்மான் கவாஜா மற்றும் மார்னஸ் லபுஷேன் இருவரும் வெறுப்பதாக ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இதனால் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நம்பர் 4ல் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் ஓய்வு பெற்ற பின், அந்த அணி தரப்பில் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டு வந்தார். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக களமிறங்கி நன்றாகவே பேட்டிங் செய்தார்.

ஆனாலும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் நம்பர் 4ல் களமிறங்க வேண்டும் என்று பல ஆஸ்திரேலியா ஜாம்பவான்கள் பேசத் தொடங்கினர். இந்த விவகாரம் குறித்து ஸ்டீவ் ஸ்மித் பேசுகையில், கேமரூன் க்ரீன் காயமடைந்து விலகி இருப்பதால், மிடில் ஆர்டரில் ஒரு இடம் காலியாக உள்ளது. நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின் லபுஷேன் மற்றும் கவாஜா உள்ளிட்டோரிடம் சில ஆலோசனையில் ஈடுபட்டேன்.
அவர்கள் நான் டாப் ஆர்டரில் விளையாடுவதை வெறுக்கிறார்கள். நான் நம்பர் 4ல் களமிறங்குவது அவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கிறார்கள். அதேபோல் தொடக்க வீரராக களமிறங்கக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். நம்பர் 4ல் விளையாடி சில நல்ல சாதனைகளை செய்துள்ளேன். ஒருவேளை எந்த பேட்டிங் வரிசையில் பேட்டிங் செய்கிறார் என்று கேட்டால், நம்பர் 4 என்று தான் சொல்வேன்.
ஆனால் எப்போதும் பேட்டிங் வரிசை பற்றியெல்லாம் கவலைக் கொண்டதில்லை. கடந்த வாரம் சில விஷயங்களை பார்த்த போது, நம்பர் 4ல் விளையாட கோரிக்கை வைத்துள்ளேன். இருந்தாலும் எனது பேட்டிங் வரிசை பற்றி கவலையில்லை. தற்போது நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக நம்பர் 3ல் விளையாடி வருகிறேன். அந்த அனுபவமும் மகிழ்ச்சியாகவே உள்ளது.
நம்பர் 3ல் களமிறங்கி விளையாடும் போது என்னால் பந்துகளை நன்றாக விட முடிகிறது என்று தெரிவித்துள்ளார். பார்டர் கவாஸ்கர் டிராபிக்காக ஆஸ்திரேலியா அணி வீரர்கள் பலருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு, உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், கவாஜா, லபுஷேன், டிராவிஸ் ஹெட் உள்ளிட்ட அனைவருக்கும் அந்த அணி நிர்வாகம் ஓய்வு அளித்து தயார் செய்து வருகிறது.