அடிலெய்ட்: வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் அம்ப்ரோஸ், ஆஸ்திரேலியா ஜாம்பவான் கிளென் மெக்ராத் வரிசையில் இந்தியாவின் பும்ரா இணைந்துவிட்டதாக ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பும்ரா தான் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பெர்த் மைதானத்தில் அடைந்த வெற்றி முக்கியமானதாக அமையும். இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கிய பும்ரா, தனி வீரராக ஒட்டுமொத்த ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களையும் திணறடித்தார். ஆஸ்திரேலியா ரசிகர்களே பும்ராவின் பவுலிங்கை பார்த்து மிரண்டு போயினர்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. இதுகுறித்து ரிக்கி பாண்டிங் பேசுகையில், கடினமான நேரங்களில் ஒரு கேப்டன் முன் நின்று வழிநடத்துவது மிகவும் அவசியம். பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பும்ரா, உலகின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர் நான் தான் என்பதை அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார்.
முதல் இன்னிங்ஸில் மட்டுமல்லாமல், பும்ராவின் ஒட்டுமொத்த பவுலிங்கும் வியக்க வைத்தது. அவரின் வேகம், கன்சிஸ்டன்சி, இரு பக்கமும் பந்தை ஸ்விங் செய்தது, பேட்ஸ்மேன்களை போல்ட் எடுத்தது என்று மிரட்டிவிட்டார்.. பெர்த் டெஸ்டில் பும்ராவின் பவுலிங்கிற்கும், மற்ற வேகப்பந்துவீச்சாளர்களின் பவுலிங்கிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தது.
இந்திய வேகப்பந்துவீச்சாளர்களில் GOAT இவர் தான். ஏனென்றால் 3 வடிவங்களிலும் இவ்வளவு தாக்கத்தை வேறு எந்த பவுலரும் செய்து பார்த்ததில்லை. ரசிகர்கள் அனைவர் முன்பாகவும் கைகளை உயர்த்தி டி20 கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் என்று 3 வடிவங்களிலும் பும்ரா தான் சிறந்த பவுலர் என்பதை கூற முடியும். இதற்கு பும்ரா வீழ்த்திய விக்கெட்டுகள் காரணமல்ல. நீண்ட காலமாக உச்சக்கட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறன் தான் காரணம்.
சிறந்த ஆடுகளம் அமைந்தால், பும்ரா என்னவெல்லாம் செய்வார் என்பதை பார்த்துவிட்டோம். இதனைத் தொடர்ந்து செய்தால், மேக்ஸ்வெல் கூறியதை போல் பும்ரா யாரும் எட்ட முடியாத நிலைக்கு சென்றுவிடுவார். சிறந்த பவுலர்களான அம்ப்ரோஸ், மெக்ராத் வரிசையில் பும்ரா இருப்பதாக நினைக்கிறேன். ஏனென்றால் அவர்களும் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு ரன்னை கூட எளிதாக விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
பும்ராவின் பவுலிங்கில் ரன்கள் அடிக்கவில்லை என்றால், அவருக்கு கொஞ்சம் கூட அழுத்தம் கொடுக்க முடியாது. எப்போதும் சிறந்த வீரர்கள் பேட்ஸ்மேன்களை ரன்கள் அடிக்கவிடாமல் தடுத்து நிறுத்துவார்கள். இதனால் பேட்டிங் செய்வது கடினமாக தெரியும். சிறந்த பவுலர்களை பவுலிங் செய்யும் போது, பேட்ஸ்மேன்கள் தங்களின் இயல்பான ஆட்டத்தையும், ஷாட்களை மறந்துவிடுவார்கள். எப்போது ரன்களை எடுக்காமல், விக்கெட்டை காப்பாற்ற நினைக்கிறோமோ, அப்போது பேட்டிங் செய்வது கடினமாகிவிடும்.
நானாக இருந்தால் பும்ராவை ஒவ்வொரு பந்திலும் அட்டாக் செய்ய முயற்சிப்பேன். டவுன் தி டிராக் இறங்கி வந்து அவரின் தலைக்கு மேல் பந்தை விளாசுவேன். இது காமெடியாக இருக்கலாம். ஆனால் முன்னேச்சரிக்கையாக பவுலருக்கு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே, பேட்ஸ்மேன்கள் தப்பிக்க முடியும். அவரின் பந்தில் ரன்கள் அடிக்க தீவிரமாக முயற்சிப்பேன். ஆனால் பும்ரா எளிதாக ரன்கள் அடிக்க விடமாட்டார். சிறந்த பவுலர்களை ரன்களை சேர்க்க தடுக்கும் போது, சிறந்த பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்த்து பவுலரின் கட்டுக்கோப்பை தடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.