மும்பை: 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கரை மட்டும் இந்திய அணியில் வைத்துக் கொண்டதை போல், 2027 உலகக்கோப்பைத் தொடரில் விராட் கோலியை மட்டும் வைத்துக் கொள்ள பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் விராட் கோலியின் ஃபிட்னஸை பொறுத்து முடிவில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றுவிட்டார். ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வரும் விராட் கோலி, அடுத்ததாக இந்திய அணிக்காக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளார். இதனால் சுமார் 7 மாதங்களுக்கு பின் இந்திய அணி ஜெர்சியில் விராட் கோலியை பார்க்க ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

ஆனால் அஜித் அகர்கர், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் 2027 உலகக்கோப்பையில் விளையாட முனைப்பு காட்டவில்லை என்று கூறி இருக்கிறார். இதனால் இருவரும் விரைவில் ஓய்வு பெறலாம் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் ரோகித் சர்மாவுக்கு மட்டுமே பிசிசிஐ கதவை மூட முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
ஏனென்றால் விராட் கோலிக்கு 36 வயதாகிவிட்டாலும், அவர் மிகச்சிறந்த ஃபிட்னஸ் உடன் இருக்கிறார். ஆனால் ரோகித் சர்மாவுக்கு 38 வயதாகிவிட்ட நிலையில், ஃபிட்னஸ் குறைந்து வருகிறது. இது ஃபீல்டிங்கிலும் எதிரொலிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே மும்பை அணிக்காக ரோகித் சர்மா ஃபீல்டிங்கில் பெரியளவில் பங்களிப்பதில்லை.
2027 உலகக்கோப்பைத் தொடரின் போது ரோகித் சர்மாவுக்கு 40 வயதாகிவிடும். இதனால் இந்திய அணியில் ஒரேயொரு சீனியர் வீரரை மட்டும் வைத்துக் கொள்ள பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் சச்சின் டெண்டுல்கர் மட்டும் விளையாடியதை போல், 2027 உலகக்கோப்பையில் விராட் கோலி மட்டும் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
அதுமட்டுமல்லாமல் விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு மிகப்பெரிய ஒன்றாகும். ரோகித் சர்மாவுக்கு உள்நாட்டில் அதிக ரசிகர்கள் இருந்தாலும், வெளிநாட்டில் விராட் கோலியை பார்க்கவே அதிகளவில் கூட்டம் கூடும். பிசிசிஐ விளம்பர வருவாய் மற்றும் மக்களின் செண்டிமெண்ட் ஆகியவையால் உலகக்கோப்பை தொடருக்கும் மிகப்பெரியளவில் எதிர்பார்ப்பு அதிகரிக்கும்.
இதனால் விராட் கோலியின் கடைசி உலகக்கோப்பைத் தொடராக 2027ஆம் ஆண்டு உலகக்கோப்பை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விராட் கோலியின் ஃபார்மை பொறுத்தே இந்த முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. தொடர்ச்சியாக 2 அல்லது 3 ஒருநாள் தொடர்களில் விராட் கோலி சொதப்பினால், நிச்சயமாக இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்படவும் வாய்ப்புகள் உள்ளது.