மும்பை: 2021-22ல் ஆஸ்திரேலியா மண்ணில் நடந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் போது, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியுடன் நாடு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போது மீண்டும் நவம்பரில் நடக்கவுள்ள ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சில போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
2021-22ல் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று புதிய வரலாறு படைத்தது. காபா மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் புஜாரா - ரிஷப் பண்ட் கூட்டணி இணைந்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தனர். அந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி அஜிங்கியா ரஹானே தலைமையில் களமிறங்கி வெற்றிபெற்றது.

அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய விராட் கோலி, முதல் குழந்தை பிறப்பின் போது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இதனால் 2வது டெஸ்ட் போட்டிக்கு முன் விராட் கோலி நாடு திரும்பியதால், இந்திய அணி அஜிங்கியா ரஹானே தலைமையில் களமிறங்கி அபார வெற்றியை பெற்றது.
முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் விராட் கோலி இந்தியா வருவது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பே முடிவு செய்திருந்தார். இதுதொடர்பாக பிசிசிஐ நிர்வாகத்திடமும் விராட் கோலி கூறியிருந்ததால், இந்திய அணி பேக் அப் திட்டத்துடன் ஆஸ்திரேலியா சென்றிருந்தது. தற்போது இந்திய அணியின் கேப்டனாக உள்ள ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.
தனிப்பட்ட காரணங்களால் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா பங்கேற்பது சந்தேகம் என்று தெரிய வந்துள்ளது. ஒருவேளை ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு முன்பாக சிக்கல்கள் சரி செய்யப்பட்டால், நிச்சயம் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய கேப்டன்களுக்கு தொடர்ந்து 2வது முறையாக சிக்கல் வந்திருப்பது ரசிகர்களிடையே விவாதமாகியுள்ளது.
இதன் காரணமாக இந்திய அணியின் பேக் அப் தொடக்க வீரர்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவே தெரிகிறது. ருதுராஜ் கெய்க்வாட், அபிமன்யூ ஈஸ்வரன், சாய் சுதர்சன் உள்ளிட்ட வீரர்களை இந்திய அணி நிர்வாகம் தீவிரமாக தயார் செய்து வருகிறது. இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரிலும் ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்றும் தகவல் வெளி வந்துள்ளது. இருப்பினும் கடைசி நிமிடத்தில் தான் ரோஹித் சர்மா விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.