சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா விலகி இருக்கிறார் என இந்திய அணி சார்பாக சொல்லப்பட்டு இருக்கிறது. ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக டாஸ் நிகழ்வின்போது தற்காலிக கேப்டன் பும்ராவும் அதை தான் கூறினார்.
"கேப்டன் ரோஹித் சர்மா தலைமை பண்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் இந்த போட்டியில் இருந்து தாமாகவே விலகி விட்டார். இது எங்கள் அணியின் ஒற்றுமையை வெளிக்காட்டுகிறது. இதில் எந்த சுயநலமும் இல்லை அனைத்தும் அணியின் நலனுக்காகவே செய்யப்படுகிறது" என்றார் பும்ரா.

ஆனால், இதை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மார்க் டெய்லர் மறுத்து பேசி இருக்கிறார். ரோஹித் சர்மாவை அணியை விட்டு நீக்கி விட்டார்கள். அவர் சரியாக விளையாடவில்லை என்பதால் அணியில் இருந்து அவரை நீக்கி இருக்கிறார்கள். அதை வெளிப்படையாக சொல்வதில் என்ன பிரச்சனை என அவர் கேட்டு இருக்கிறார்.
சிட்னியில் நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றால் தொடரை 2 - 2 என சமன் செய்து பார்டர் - கவாஸ்கர் கோப்பையை தக்க வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு முக்கியமான போட்டியில் இருந்து கேப்டன் விலகுவாரா? அவர் சரியாக ஆடவில்லை என்பதால் நீக்கிவிட்டீர்கள். அதை ஏன் சொல்ல தயங்குகிறீர்கள்? என மார்க் டெய்லர் கேட்டு இருக்கிறார்.
இது பற்றி மார்க் டெய்லர் பேசுகையில், "உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ரோஹித் சர்மாவை அணியில் இருந்து நீக்கிவிட்டார்கள். அப்படித்தான் நான் அதை சொல்வேன். ஒரு அணியின் கேப்டன் ஒரு தொடரின் கடைசி போட்டியில், அதிலும் வெற்றியாளரை நிர்ணயிக்கக்கூடிய போட்டியில் இருந்து விலக மாட்டார். அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். ஆனால், அவர்கள் ஏன் அதை சொல்ல தயங்குகிறார்கள்? என எனக்குத் தெரியவில்லை. அவர் ஒட்டுமொத்தமாக அணியிலிருந்து நீக்கப்படவில்லை. இந்த ஒரு போட்டியிலிருந்து மட்டும்தான் அவள் விலக்கப்பட்டு இருக்கிறார். ஏனெனில், அவர் ஃபார்மில் இல்லை. ஆனால், இதுதான் தொழில் முறை விளையாட்டு என்பது." என்று கூறி இருக்கிறார்.