சிட்னி: இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டது, இந்திய கிரிக்கெட் உலகில் விவாதமாக மாறி உள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி ஜாம்பவான் மேத்யூ ஹெய்டன், "38 வயதில், ரோஹித் சர்மா தற்போது வாய்ப்பை இழக்கக் கூடிய நிலையில் இருக்கிறார்" என்று கூறி இருக்கிறார். மேலும், எதற்காக அவசர, அவசரமாக சுப்மன் கில் ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பது குறித்தும் பேசி இருக்கிறார்.
இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கு முன்னதாக, 'ஜியோஸ்டார்' நிகழ்ச்சியில் பேசிய மேத்யூ ஹெய்டன், ரோஹித்தின் கேப்டன் பதவி நீக்கம் குறித்து தனது பார்வையைப் பதிவு செய்தார். "தொலைதூரப் பார்வையிலிருந்து பார்க்கும்போது, ரோஹித் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது ஒரு சுவாரஸ்யமான நகர்வு. சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தேர்வாளர்கள் முழுக்க முழுக்க வயதை மட்டுமே பார்க்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். 38 வயதில், உலகக் கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், அவரது வயதின் காரணமாகவே அவர் வாய்ப்பை இழக்கும் நிலையில் இருக்கிறார்" என்று ஹெய்டன் தனது கருத்தைத் தெரிவித்தார்.

விமர்சனத்தை முன்வைத்தாலும், ரோஹித்தின் திறமையையும், சாதனைகளையும் பாராட்டவும் அவர் தவறவில்லை. "அவரது திறமையும், கிளாஸும் எப்போதும் வெளிப்படும். அது அவரது தனிப்பட்ட செயல்பாடுகளில் மட்டுமல்ல, ஒரு அணியாக இந்தியாவின் வெற்றியிலும் பிரதிபலிக்கிறது. தோனி மற்றும் கோலியின் சகாப்தங்களைப் போலவே, இவரது தலைமையிலும் நிறைய வெற்றிகள் கிடைத்துள்ளன" என்று அவர் குறிப்பிட்டார்.
"சுப்மன் கில்லைக் கொண்டு வருவது, ஒருவித இன்சூரன்ஸ் பாலிசி போன்றது. ரோஹித் சர்மா ஓய்வறைக்குள் இருக்கும்போதே, சுப்மன் கில் தலைமைப் பண்புகளைக் கற்றுக்கொள்வதை உறுதி செய்வதே இதன் நோக்கம். ஒருவேளை, ரோஹித் அடுத்த உலகக் கோப்பையில் விளையாடினால், அது ஒரு போனஸாகவே இருக்கும்" என்று கில் அவசரகதியில் ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கட்ட காரணத்தை கூறினார் ஹெய்டன்.
விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், ஏழு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சர்வதேசக் களத்திற்குத் திரும்பும் ரோஹித் மற்றும் கோலியின் ஆட்டத்தைக் காண தான் ஆவலுடன் இருப்பதாக ஹெய்டன் கூறினார். "இருவரும் சேர்ந்து சுமார் 600 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளனர். ஆஸ்திரேலியாவின் நல்ல ஆடுகளங்களில், அவர்கள் சிறப்பாகச் செயல்பட ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. ஆஸ்திரேலிய ரசிகர்கள் விராட் கோலியைத் தங்கள் சொந்த வீரரைப் போலக் கொண்டாடுகிறார்கள். ரோஹித் சர்மாவுக்கும் அதே நிலைதான். மைதானங்களில் கூட்டம் அலைமோதும்" என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.