மெல்போர்ன்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நடக்கும் மெல்போர்ன் மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் குறித்து அறிந்து கொள்வோம். அதேபோல் மழை எச்சரிக்கை, டாஸ் வென்றால் என்ன தேர்வு செய்ய வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நாளை அதிகாலை தொடங்கவுள்ளது. மெல்போர்ன் மைதானத்தில் நடக்கவுள்ள இந்தப் போட்டியை காண்பதற்கு 85 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வரவுள்ளனர். ஏற்கனவே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ள நிலையில், இரு அணிகளும் கடைசி நேர தயாரிப்பு பணிகளில் இருக்கின்றனர்.

ஆஸ்திரேலியா அணி தரப்பில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹேசல்வுட்-க்கு மற்றும் மெக்ஸ்வீனி ஆகியோரது இடத்தில் போலட்ண்ட் மற்றும் சாம் கோன்ஸ்டாஸ் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மெல்போர்ன் எம்சிஜி மைதானத்தை பொறுத்தவரை 2000ஆம் ஆண்டுக்கு பின் 24 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது.
அந்த 24 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி 18 போட்டிகளில் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியும், 2 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன. அதேபோல் 24 போட்டிகளில் 10 முறை முதல் பேட்டிங் செய்த அணியும், 12 முறை 2வது பேட்டிங் ஆடிய அணியும் வென்றுள்ளன. அதேபோல் எம்சிஜி பிட்ச் வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஸ்பின்னர்கள் இருவருக்கும் உதவியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பந்து தேய்மானமடைந்த பின் பேட்ஸ்மேன்களால் எளிதாக ரன்களை சேர்க்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் புதிய பந்தில் பேட்ஸ்மேன்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் டாஸ் வெல்லும் அணிகள் 15 முறை பேட்டிங் செய்த நிலையில், அதில் மொத்தமாக 6 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளனர்.
ஆனால் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்த 9 முறையில், 5 முறை வென்றிருக்கின்றன. இதனால் டாஸ் வெல்லும் அணி பவுலிங்கை தேர்வு செய்ய வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. பிரிஸ்பேனை போல் மெல்போர்னில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்று கணிக்கப்பட்டுள்ளது. 2வது நாள் ஆட்டத்தின் போது மட்டும் மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தாலும், அது நீண்ட நேரம் நீடிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 5 நாட்களும் ஆட்டம் நடப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்று உறுதியாகியுள்ளது. 2012ஆம் ஆண்டுக்கு பின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஒன்றில் கூட தோல்வியடைந்ததில்லை. 12 ஆண்டுகளாக இந்திய அணி செய்து வரும் சாதனையை இம்முறையும் தொடர வேண்டும் என்று ரசிகர்களும் எதிர்பார்த்துள்ளனர்.