மெல்போர்ன்: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் சொதப்பலான ஆட்டத்தை ஆடி ரசிகர்களை நொந்து போக வைத்தார். முக்கியமான கட்டத்தில் ஐந்தாவது நாள் ஆட்டத்தில் அவர் முதல் 16 ஓவர் வரை நிதானமாக ஆடி நம்பிக்கை அளித்தார். ஆனால், அதன் பின் ஏமாற்றம் அளித்தார்.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 369 ரன்கள் எடுத்து இருந்தது. ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணிக்கு 340 ரன்கள் என்ற வெற்றி இலக்கை ஆஸ்திரேலிய அணி நிர்ணயம் செய்தது.

கடைசி நாள் ஆட்டத்தில் 92 ஓவர்கள் மீதம் இருந்த நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை துவக்கியது. ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா மிகவும் நிதானமாக ஆடி வந்தனர். 16 வது ஓவர் வரை ரோஹித் சர்மா 39 பந்துகளை சந்தித்து 9 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
இந்த போட்டியை டிரா செய்யும் நோக்கில் ரோஹித் - ஜெய்ஸ்வால் ஆடுகிறார்கள் என ரசிகர்கள் எண்ணினர். இந்த நிலையில், 17 வது ஓவரில் பாட் கம்மின்ஸ் வீசிய பந்தை மிட் ஆஃப் திசையில் அடிக்க முயன்றார் ரோஹித். ஆனால், பந்து எட்ஜ் ஆகி கல்லியில் நின்றிருந்த மிட்செல் மார்ஷ்-ஆல் கேட்ச் பிடிக்கப்பட்டது.
இதை அடுத்து ரோஹித் சர்மா 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். மீண்டும் ஏமாற்றத்தை அளித்தார். இந்தப் போட்டியை டிரா செய்வதற்காக ஆடிய போது ஏன் ஷாட் ஆட முயல வேண்டும் என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
ரோஹித்தை தொடர்ந்து வந்த கே எல் ராகுல் 5 பந்துகளை மட்டுமே சந்தித்து டக் அவுட் ஆனார். அதன் பின் விராட் கோலி 39 பந்துகளை சந்தித்த பின் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதை அடுத்து இந்திய அணி 33 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது.