மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் அனுபவ வீரர்களான விராட் கோலியும், ரோகித் சர்மாவும் ரன்கள் குவிக்க வேண்டும். இந்த சூழலில் இந்த தொடருக்கு முன்பு நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோலி 6 இன்னிங்ஸில் 93 ரன்கள் எடுத்திருந்தார்.
கேப்டன் ரோஹித் சர்மா ஆறு இன்னிங்சில் 91 ரன்களும் அடித்திருந்தார்.இதனால் பலரும் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தங்களுடைய இறுதி கட்ட கிரிக்கெட் வாழ்க்கையில் இருப்பதாக விமர்சித்திருந்தார்கள்.இதற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹசி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,கிரிக்கெட் வரலாற்றில் பலமுறை சாம்பியன்ஸ் வீரர்களை பலரும் குறைத்து மதிப்பிட்டு நாம் பார்த்திருக்கின்றோம். திடீரென்று கிரிக்கெட் விமர்சகர்கள் தோன்றி ரோகித் சர்மாவின் கேரியர் அவ்வளவுதான். விராட் கோலி இனி பழைய கோலி போல் விளையாட மாட்டார் என்று கூறுவதெல்லாம் வேடிக்கையாக இருக்கின்றது.
நீங்கள் சொல்லும் வீரர்கள் எல்லாம் மிகப்பெரிய ஜாம்பவான்கள். தங்களது நாட்டுக்காக பல பெருமைமிக்க இன்னிங்ஸ்களை விளையாடி இருக்கிறார்கள். இந்த வீரர்களை பற்றி நீங்கள் குறைத்து மதிப்பிட்டால் உங்கள் முகத்தில் நீங்களே முட்டையை அடித்துக் கொள்ளும் நிலை வரலாம். ஏனென்றால் இந்த வீரர்கள் மீண்டும் சிறப்பாக விளையாடுவார்கள்.
கோலி, ரோஹித் சர்மா எல்லாம் திறமை வாய்ந்தவர்கள்.அவர்கள் அவ்வளவுதான் என்று நினைப்பது முட்டாள்தனமானது. அதேபோல் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியை தழுவி இருப்பதால் இந்திய அணியும் குறைத்து மதிப்பீட கூடாது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை தற்போது அவர்கள் அனைத்து பிரிவுகளிலும் நிலையான தன்மையுடன் இருக்கின்றார்கள்.
தற்போது தொடக்க வீரர் யார் என்ற கேள்வி எழுந்து உள்ளது.நாதன் மெக்ஸ்வினிக்கு அந்த ரோல் வழங்கப்படும் என தெரிகிறது. எனவே ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை எந்த ஒரு குறையும் இல்லை. அவர்கள் நல்ல முறையில் தயாராகி வெள்ளிக்கிழமை டெஸ்ட் போட்டிக்கு ரெடியாகி இருப்பார்கள் என்று மைக்கில் ஹஸி தெரிவித்துள்ளார்.