மும்பை: டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து ரிவர்ஸ் ஸ்விங்காக தொடங்கிவிட்டால், இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தான் அபாயகரமான பவுலர் என்று முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருன் கூறியுள்ளார். பும்ரா மற்றும் முகமது ஷமியை விடவும் சிராஜ் அபாயகரமானவர் என்று கூறியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டிராபி நவம்பர் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில், தற்போது இந்த டெஸ்ட் தொடருக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதற்கு கடந்த 2 முறையும் இந்திய அணி பயணித்து கோப்பையை வென்றதே காரணமாகும்.

அதிலும் காபா டெஸ்ட் தோல்வியை எந்த ஆஸ்திரேலியா வீரர்கள் மற்றும் ரசிகர்களாலும் மறக்க முடியாது. 32 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக காபா மைதானத்தில் வீழ்த்தி இந்தியா வரலாறு படைத்தது. இந்த நிலையில் மீண்டும் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், பழி தீர்க்க ஆஸ்திரேலியா வீரர்கள் தீவிரமாக உள்ளனர்.
கடந்த முறையை விடவும் இம்முறை இந்திய அணி பலமாக உள்ளது. ஏனென்றால் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களான பும்ரா, சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகிய மூவரும் தயாராக இருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் குறித்து முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் பேசுகையில், ஐபிஎல் தொடர் மூலமாக சரியான பவுலரை கண்டறிகிறார்களா, அவர்களுக்கு சரியான வாய்ப்புகள் அளிக்கப்படுகிறதா என்பது தான் கேள்வி.
ஏனென்றால் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு முன் அதனை தயார் செய்ய வேண்டும். ஐபிஎல் தொடரில் ஏராளமான பவுலர்கள் 140 முதல் 150 கிமீ வேகத்தில் வீசக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்களை கண்டறிந்து சரியான வழியில் பயணிக்க வைத்து வாய்ப்பு அளிக்க வேண்டும். ஏனென்றால் ரெட் பால் கிரிக்கெட்டுக்கு அந்த பவுலர்கள் அனைவரும் பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.
அவர்களை தயார் செய்வதற்கு நேரம் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு போதுமான வாய்ப்புகள் அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல் முதல்தர கிரிக்கெட்டில் பிட்சில் எந்த உதவியும் இல்லாமல் பவுலிங் செய்ய வேண்டிய நிலை வரும். அதில் இருந்து சில விஷயங்களை கற்றுக் கொண்டால், ரிவர்ஸ் ஸ்விங் எப்படி செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால் நமது நாட்டின் சூழலுக்கு ரிவர்ஸ் ஸ்விங்கை அறிந்து வைப்பது அவசியம். அதுதான் இந்தியாவின் முன்னணி பவுலர்களான முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் இருவருக்கும் சிறந்த பாடமாக அமைந்தது. அதனால் தான் ரிவர்ஸ் ஸ்விங்காகும் போது சூழல் மட்டும் கொஞ்சம் சாதகமாக அமைந்தாலும், உலகிலேயே சிராஜ் தான் மிகவும் அபாயகரமான பவுலர் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி பவுலரான பும்ராவை விடவும் சிராஜ் அபாயகரமான பவுலர் என்று முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் கூறியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் பரத் அருண் கூறியதற்கு ஏற்ப தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் சிராஜ் மிகவும் அபாயகரமான பவுலராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.