மும்பை : நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வியை தழுவிய நிலையில் தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் முக்கிய பௌலரான முகமது சமி கடந்த ஒரு ஆண்டாக எந்த வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் இருக்கிறார். 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் சமி விளையாடினார்.

அதன் பிறகு காயம் காரணமாக ஒரு போட்டியில் கூட அவர் பங்கேற்கவில்லை. இந்த சூழ்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சமி திரும்பி விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென்று காலில் வீக்கம் ஏற்பட்டதால் அது தடைப்பட்டது. இந்த சூழ்நிலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தான் 100 சதவீதம் உடல் தகுதியை எட்டிவிட்டதாகவும் பிசிசிஐ மருத்துவர்கள் அனுமதி அளித்த பிறகு ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி தமது பார்மை நிரூபித்து ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்பேன் என்று சாமி கூறியிருந்தார்.
இந்த சூழ்நிலையில் முகமது சமி ரஞ்சி கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக விளையாட கூடியவராக இருக்கின்றார். இந்த தருணத்தில் கர்நாடகா மற்றும் மத்திய பிரதேஷ் அணிக்கு எதிராக பெங்கால் அணி விளையாடும் போட்டிக்கான வீரர்கள் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் முகமது சமியின் பெயர் இடம்பெறாதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
ஆகாஷ் தீப், அபிஷேக் போரெல், முகேஷ் குமார், அபிமன்யு ஈஸ்வரன் போன்ற வீரர்கள் எல்லாம் ஆஸ்திரேலியா ஏ தொடருக்காக சென்ற நிலையில் ஷமியின் பெயர் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமி இந்த தொடரில் விளையாடவில்லை.
இதனால் சமி ஆஸ்திரேலிய தொடரில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் சமி நேரடியாக சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு விளையாட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.