மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியை அடுத்த விமானத்திலேயே ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வலியுறுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியை வரும் 22ஆம் தேதி விளையாடுகிறது. வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான பெர்த் ஆடுகளத்தில், இந்த போட்டி நடைபெறுகிறது.

இந்த சூழலில் கடந்த ஒரு ஆண்டாக முகமது ஷமி காயம் காரணமாக எந்தவித போட்டியிலும் விளையாடாமல் இருந்தார். இந்த நிலையில் ரஞ்சி கிரிக்கெட்டில் முகமது ஷமி அண்மையில் மத்திய பிரதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் களம் இறங்கினார். இதில் அபாரமாக செயல்பட்ட ஷமி முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட்டும், இரண்டாவது இன்னிங்சில் மூன்று விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினார்.
பேட்டிங்கில் 36 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் கங்குலி, நானாக இருந்தால் முஹமது ஷமியை உடனடியாக ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைத்து விடுவேன். ஷமி, சையது முஸ்தாக் அலி தொடரில் விளையாட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஷமி முதல் டெஸ்ட் போட்டியில் இடம் பெறவில்லை என்றாலும் பரவாயில்லை. அவர் ஆஸ்திரேலியாவில் இருக்க வேண்டும்.
தொடர்ந்து அங்கு வலை பயிற்சியில் அவர் பந்து வீசி வருவதன் மூலம் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு கூட அவரால் தயாராக முடியும். அடுத்த விமானத்திலேயே ஷமியை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வையுங்கள். பெர்த் டெஸ்ட் போட்டி வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானம் என்பதால், ஷமி அதுக்கு நல்ல தேர்வாக இருப்பார்.
ஒருவேளை முதல் டெஸ்ட் போட்டியில் ஷமி விளையாடவில்லை என்றால் இந்திய அணி ஆகாஷ் தீப்பிற்கு பதில் பிரசித் கிருஷ்ணாவை சேர்க்க வேண்டும். ஏனென்றால் பிரசித் கிருஷ்ணா நல்ல உயரமான வீரராக இருக்கின்றார். இதன் மூலம் அவர் விக்கெட்டுகளை எடுக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த சூழலில் ஷமியை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்து அடிலெய்ட் டெஸ்ட் போட்டிக்கு அவரை தயார்படுத்துங்கள் என்று கம்பீரை, கங்குலி வலியுறுத்தியுள்ளார்.