சிட்னி: ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர்களான சாம் கான்ஸ்டஸ் மற்றும் ட்ராவிஸ் ஹெட் இருவரும் ஒரே ஓவரில் வீழ்த்தி இந்திய அணியின் முகமது சிராஜ் அசத்தியுள்ளார். இதனால் 2வது நாளின் முதல் செஷனிலேயே இந்திய அணியின் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலியா அணி தடுமாறி வருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்களை எடுத்திருந்தது. இதன்பின் 2வது நாள் ஆட்டத்தை கான்ஸ்டஸ் - லபுஷேன் கூட்டணி தொடங்கியது.

இதில் பும்ராவின் வேகத்தில் லபுஷேன் 2 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் கான்ஸ்டஸ் - ஸ்டீவ் ஸ்மித் இருவரும் இணைந்தனர். கான்ஸ்டஸ் முழுக்க முழுக்க பும்ராவின் கவனத்தை தன் பக்கம் வைத்திருக்க விரும்பினார். இதனால் பும்ராவின் பவுலிங்கில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி ஒரு பவுண்டரியை அடிக்க, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மீண்டும் ஒரு அரைசதம் அடித்துவிடுவாரோ என்று இந்திய ரசிகர்களும் சந்தேகம் அடைந்தனர்.
ஆனால் இந்திய ரசிகர்களின் சந்தேகத்தை ஒரே ஓவரில் சிராஜ் மாற்றிக் காட்டினார். 12வது ஓவரின் 2வது பந்தை ஃபுல்லர் லெந்தில் வீசி கான்ஸ்டஸை ட்ரைவ் அடிக்க தூண்டினார். சரியாக அவரும் ட்ரைவ் ஆட பேட்டை விட, அது அவுட்சைடு எட்ஜாகி ஜெய்ஸ்வால் கைகளில் கேட்சானது. இதனால் கான்ஸ்டஸ் 23 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து இந்திய அணிக்கு எமனாக பார்க்கப்பட்ட ட்ராவிஸ் ஹெட் களமிறங்கியதால் ஆட்டத்தில் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது. அவர் களமிறங்கி எதிர்கொண்ட 2வது பந்திலேயே பவுண்டரி அடிக்க, அடுத்த பந்தை ஆஃப் ஸ்டம்ப் லைனை நோக்கி சிராஜ் வீசினார். அதனை டிஃபென்ஸ் ஆட ட்ராவிஸ் ஹெட் பேட்டை வைக்க, அது நேராக ஸ்லிப்பில் நின்ற கேஎல் ராகுல் கைகளில் விழுந்தது.
இதன் மூலமாக ஒரே ஓவரில் 2 விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் இந்திய அணியை கம்பேக் கொடுக்க வைத்துள்ளார். மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இருந்தே சிராஜ் சரியான ரிதமில் இருந்து வருகிறார். இதனால் இம்முறை பும்ராவுக்கு சிறந்த கம்பெனியை மறுமுனையில் இருந்து சிராஜ் கொடுக்க முடியும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.