மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் முகமது சிராஜ் விக்கெட் வீழ்த்திய பிறகு சஞ்சய் மஞ்சுரேக்கருக்கு பதிலடி தரும் விதமாக வாயை மூடுங்கள் என ரியாக்ஷன் கொடுத்தது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் சிராஜ் 23 ஓவர்கள் வீசி 122 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அதாவது ஒரு ஓவருக்கு ஐந்து ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்த சிராஜ் எந்த ஒரு விக்கெட்டையும் வீழ்த்தவில்லை. இந்த நிலையில் ஆஸ்திரேலிய ஆடுகளங்களுக்கு சிராஜ் சரிபட்டு வர மாட்டார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் காட்டமாக விமர்சனம் செய்திருந்தார்.

மேலும் சிராஜை அணியை விட்டு நீக்கி பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். இதனால் கடுப்பான சிராஜ் இன்று இரண்டாவது இன்னிங்ஸில் நல்ல முறையில் பந்து வீசி வருகிறார். குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் அனுபவ வீரரான கவாஜாவின் விக்கெட்டை சிராஜ் தன்னுடைய அபார பந்தின் மூலம் போல்ட் ஆக்கினார்.
இதனை அடுத்து சிராஜ் வாயில் கையை வைத்து, வாயை மூடுங்கள் என்று ரியாக்ஷன் கொடுத்து கொண்டாடினார். சஞ்சய் மஞ்சுரேக்கர் தம்மை பார்த்து வைத்த குற்றச்சாட்டுக்கு தான் சிராஜ் இப்படி ஒரு ரியாக்ஷன் கொடுத்திருப்பதாகவும் சஞ்சய் மஞ்சுரேக்கருக்கு இது தேவையில்லாத வேலை என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் சஞ்சய் மஞ்சுரேக்கர், யாரெல்லாம் வேண்டாம் என்று கூறுகிறாரோ, அதன் பிறகு அவர்களெல்லாம் சிறப்பாக விளையாடுகின்றனர். இப்படித்தான் நிதிஷ்குமார் ரெட்டி அணியின் பேலன்ஸை கெடுப்பதாக சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறி இருந்த நிலையில் அவர் முதல் இன்னிங்சில் அபார சதம் அடித்து அசத்தினார்.
தற்போது சிராஜ் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார். ஏழு ஓவர்கள் வீசிய சிராஜ் 10 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணியை இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா எவ்வளவு குறைந்த இலக்கில் சுருட்டுகிறதோ அந்த அளவுக்கு இந்தியாவின் வெற்றி பிரகாசமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.