மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜடேஜா சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் ஜடேஜா 16 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் எடுக்காமல் மொத்தமாக 76 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
இந்த நிலையில் ஜடேஜா சேர்க்கப்பட்டதற்கான காரணமும் அவர் ஏன் சரியாக விளையாடவில்லை என்பதற்கான விளக்கத்தையும் மோர்னே மோர்க் அளித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ஜடேஜா இந்த ஆட்டத்தில் திரும்பி இருந்தாலும் அவர் கடந்த சில போட்டிகளில் பங்கேற்காமல் இருந்ததை கவனிக்க வேண்டும்.

அவருக்கு கேம் டைம் இல்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல விக்கெட்டுகளை அவர் கடந்த காலங்களில் வீழ்த்தி இருக்கிறார். அனுபவம் வாய்ந்த வீரராக விளங்குகிறார். இதனால் தான் இடதுகை சுழற் பந்து வீச்சாளர் அணியில் வந்தால் அது நல்ல பலனை கொடுக்கும் என்று ரோகித் சர்மாவும் நாங்களும் யோசித்து முடிவு எடுத்தோம்.
அது மட்டுமல்லாமல் ஜடேஜா பேட்டிங்கிலும் அபாரமாக விளையாட கூடியவர். எனினும் இன்றைய நாள் அவருக்கான ஒரு நாளாக அமையவில்லை. ஆனால் ஜடேஜா எப்போதுமே உலகத்தரம் வாய்ந்த வீரர். அவர் தன்னுடைய பந்துவீச்சில் முழு கவனம் செலுத்தி மீண்டு வருவார். இந்த ஆடுகளத்தில் சரியான இடத்தில் நாம் பந்து வீசினால், நிச்சயம் விக்கெட்டுகள் கிடைக்கும்.
ரன் ரேட்டை கட்டுப்படுத்த வேண்டும். அதேசமயம் விக்கெட்டுகளை எடுப்பதற்காக பொறுமையை கையாள வேண்டும். நாங்கள் ஆரம்பத்தில் மூன்று விக்கெட்டுகளை எடுத்தோம். இன்னும் ஒன்று அல்லது இரண்டு விக்கெட்டுகளை விரைவில் விழித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ஆனால் எங்களுக்கு அப்படி அமையவில்லை. எனினும் இந்த போட்டியில் இருந்து நாங்கள் சில நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்வோம். மூன்றாவது நாளில் கிடைக்கும் வாய்ப்பை நாங்கள் சரியாக பயன்படுத்துவோம் என நம்புகிறேன். எங்களுடைய பேட்ஸ்மேன்கள் புதிய பந்தை மட்டும் எதிர்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் விளையாடினால் நாங்களும் நன்றாக ரன் குவிப்போம் என்று மோர்னே மோர்க்கல் கூறியுள்ளார்.