பிரிஸ்பேன் : இந்திய அணி வீரர்கள் மீண்டும் பேட்டிங் செய்ய பயந்து தான் பாலோ ஆன் தவிர்க்கப்பட்டதும் அதனை கொண்டாடினார்கள் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் நார்தன் லயான் தெரிவித்துள்ளார். பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்கள் எடுத்தது.
இதை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 213 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்த நிலையில், கடைசி ஜோடியான ஆகாஷ் தீப் பும்ராவுடன் சேர்ந்து பாலோ ஆனை தவிர்த்தனர். ஃபாலோ ஆன் தவிர்க்கப்பட்டதை டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த இந்திய வீரர்கள் கொண்டாடினர்.

இதை தான் தற்போது நாதன் லயன் கடுமையாக சாடி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் இந்த வாரம் முழுவதுமே மழை அடிக்கடி குறிக்கிட்டு இருப்பது எரிச்சலை கிளப்புகிறது. இன்னும் இந்த போட்டியில் நிறைய கிரிக்கெட் எஞ்சி இருப்பதாக நினைக்கின்றேன். மழை மட்டும் குறிக்கிடவில்லை என்றால் நிச்சயம் நாங்கள் வெற்றி பெற்று இருப்போம்.
இந்த டெஸ்ட் முழுவதும் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். 185 ரன்கள் முன்னிலையில் தற்போது இருக்கின்றோம். இரண்டாவது இன்னிங்ஸில் நாங்கள் அதிரடியாக ஆடி சில ரன்களை சேர்த்து விட்டு பின் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் நாங்கள் எடுத்தால் வெற்றி கிடைக்கும். ஆனால் வானிலையை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. நேற்று இந்திய அணி வீரர்கள் பாலோ ஆன் தவிர்க்கப்பட்டதும் கொண்டாடியதை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
இது குறித்து எங்கள் அணி வீரர்களும் பேசினார்கள். இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் மீண்டும் பேட்டிங் செய்ய விரும்பாமல் தான் நேற்று அவர்கள் பாலோ ஆன் தவிர்க்கப்பட்டதும் கொண்டாடினார்கள் என நான் நினைக்கின்றேன். அது மட்டும் இல்லாமல் ஹேசல்வுட் காயம் காரணமாக விலகிய நிலையில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துக்கொண்டு பாலோ ஆனை விதிப்பதும் கடும் சவால்களை கொடுத்தது.
ஆஸ்திரேலிய அணியில் பௌலர்களின் உழைப்பு பாராட்டுக்குரியது. இந்த அணியில் நான் இடம் பிடித்திருப்பதை நினைக்க மகிழ்ச்சி கொள்கின்றேன். அஸ்வின் 536 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகும் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் வெளியே அமர்ந்திருப்பதை நினைத்து எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. இந்திய அணியின் பலத்தையே இது காட்டுவதாக நினைக்கின்றேன் என்று நாதன் லயன் கூறியிருக்கிறார்.