மெல்போர்ன்: இந்திய அணிக்கு எதிரான கடைசி 2 போட்டிகளுக்கான ஆஸ்திரேலியா அணி நாளை அறிவிக்கப்பட உள்ளது. அதில் தொடக்க வீரர் நேதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும், அவருக்கு பதிலாக பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சாம் கோன்ஸ்டாஸை சேர்க்க முடிவுகள் எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ஆஸ்திரேலியா அணியின் ஜோஷ் ஹேசல்வுட் காயமடையாமல் இருந்திருந்தால், இந்த ஆட்டத்தின் முடிவில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் ஹேசல்வுட்டின் காயம் மற்றும் வானிலை சிக்கல் காரணமாக ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் விரக்தியில் இருக்கின்றனர்.

ஏனென்றால் டெஸ்ட் தொடர் 1-1 என்ற சமனில் இருப்பதால், கடைசி 2 போட்டிகளில் வெல்ல வேண்டிய தேவை இரு அணிகளுக்கும் உள்ளது. இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலியா அணி நாளை அறிவிக்கப்படவுள்ளது. இந்த அணியில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்றாலும், சில வீரர்களை மட்டும் நீக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
காயமடைந்த ஹேசல்வுட் இடத்தை ஆஸ்திரேலியா அணி எளிதாக ஸ்காட் போலண்ட்-ஐ வைத்து நிரப்பிக் கொள்ளும். ஆனால் தொடக்க வீரர் மெக்ஸ்வீனியின் ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. 6 இன்னிங்ஸ்களில் பேட்டிங் ஆடியுள்ள மெக்ஸீனி ஒரேயொரு முறை மட்டுமே 10 ரன்களுக்கு மேல் சேர்த்திருக்கிறார். 6 இன்னிங்ஸ்களில் 4 முறை பும்ராவின் பவுலிங்கிலேயே ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார்.
இதனால் பும்ராவின் பந்துகளை சமாளித்து ஆடக் கூடிய வீரரை களமிறக்க ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. ஏனென்றால் நல்ல தொடக்கம் கிடைக்காததால் மிடில் ஆர்டரில் வரும் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ட்ராவிஸ் ஹெட் மீது அதிக அழுத்தம் ஏற்படுகிறது. லபுஷேனும் எதிர்பார்த்த அளவிற்கு ஃபார்மில் இல்லை.
இதனால் ரன்களை அடிக்கவில்லை என்றாலும், பந்தை தேய்மானமடைய வைக்கும் அளவிற்கு பேட்டிங் செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலியா நிர்வாகம் விரும்புகிறது. இதனால் பயிற்சிப் போட்டியில் அசத்தலாக விளையாடி சதம் விளாசி சாம் கோன்ஸ்டாஸை தேர்வு செய்ய வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. மற்றபடி பேக்அப் பவுலர்களாக ஷேன் அப்பாட் மற்றும் டாக்கெட் இருவரும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
அதேபோல் ஜோஷ் இங்லிஸ் மற்றும் வெப்ஸ்டர் இருவரும் பேக் அப் வீரர்களாக செயல்படவுள்ளனர். இதன்பின் ஆஸ்திரேலியா அணியில் எந்த வீரருக்கு காயம் ஏற்பட்டாலும் சிக்கல் என்பதால், 2 நாட்களுக்கு பின்னரே பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பாக்ஸிங் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து 3 போட்டிகளில் அசத்தலாக செயல்பட்டுள்ளதால், இம்முறை ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.