மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக நிதிஷ் குமார் ரெட்டி உருவெடுத்திருக்கிறார். இந்திய அணியில் சேர்க்கப்பட்ட நிதிஷ்குமார் ரெட்டி பேட்டிங்கில் முக்கிய நேரத்தில் ரன்களை சேர்த்து அணியை காப்பாற்றி இருந்தார்.
இந்த நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் சதம் அடித்து இந்திய அணியை சரிவிலிருந்து ஒரு அளவுக்கு மீட்டு இருக்கிறார். இதனால் நிதிஷ்குமார் ரெட்டியை பலரும் பாராட்டி வரும் நிலையில் முன்னால் கேப்டன் கவாஸ்கர் மட்டும் ஒரு எச்சரிக்கையுடன் வாழ்த்து செய்தியை தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து பேசிய கவாஸ்கர், நிதிஷ்குமார் ரெட்டிக்கு இது முதல் சதமாக இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் இன்னும் அவர் அதிக சதங்கள் அடிப்பார் என நம்பிக்கை இருக்கிறது. எதிர்காலத்தில் அதிக ரன்கள் அடிக்கும் வீரர்களில் நிதிஷ் குமார் ரெட்டியும் ஒருவராக இருப்பார்.
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய நட்சத்திரமாக அவர் உருவெடுத்திருக்கிறார். எனினும் நிதிஷ்குமார் ரெட்டி தனது தந்தை எவ்வளவு தியாகங்களை செய்திருக்கிறார். அவருடைய குடும்பம் எவ்வளவு பாடுபட்டு இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. நிதிஷ்குமார் இங்கே இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் இந்திய கிரிக்கெட் தான்.
எனவே இந்திய கிரிக்கெட்டை நீங்கள் சாதாரணமாக மற்ற வீரர்கள் போல் எடுத்துக்க கூடாது. உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருங்கள். கடுமையாக உழையுங்கள். அப்படி இருந்தால் நிச்சயம் உங்களுக்கு வெற்றிகரமான கிரிக்கெட் வாழ்க்கை அமையும் என்று காவாஸ்கர் கூறியிருக்கிறார்.இந்திய அணியின் பல திறமை வாய்ந்த வீரர்கள் முதல் சில போட்டிகளில் அபாரமாக விளையாடிவிட்டு அதன் பிறகு காணாமல் போய்விடுகிறார்கள்.
குறிப்பாக பிரித்விஷா போன்ற வீரர்கள் எல்லாம் தங்களுக்கு வந்த வாய்ப்பை வீணடித்து தற்போது அணி திரும்ப முடியாமல் போராடி வருகிறார்கள். கில்லும் இந்திய அணியின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் என அறியப்பட்ட பின் தற்போது மீண்டும் சரியாக விளையாடாத காரணத்தினால் நீக்கப்பட்டிருக்கிறார். இதனால் அந்த பட்டியலில் நிதிஷ்குமார் சேர்ந்து விடக்கூடாது என்பதை கவாஸ்கர் மறைமுகமாக உணர்த்திருக்கிறார்.