மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் நிதிஷ் குமார் ரெட்டி விளாசியுள்ள சதம் மறக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். அறிமுக டெஸ்டிலேயே தன்னை நிதிஷ் குமார் ரெட்டி கவர்ந்துவிட்டதாக கூறியுள்ள அவர், வாஷிங்டன் சுந்தர் அவருக்கு சிறந்த பங்களிப்பை அளித்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.
மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 474 ரன்களை குவித்தது. இதனைத் தொடர்ந்து 2வது நாளில் களமிறங்கிய இந்திய அணி ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களை சேர்த்திருந்தது.

இதன்பின் இன்று 3வது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா இருவரும் சில நிமிடங்களிலேயே ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த நிதிஷ் குமார் ரெட்டி - வாஷிங்டன் சுந்தர் இருவரும் இணைந்து 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததோடு, ஆஸ்திரேலியா பவுலர்களை சோர்வடைய வைத்தனர்.
சிறப்பாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் 162 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் உறுதியுடன் ஆடிய நிதிஷ் குமார் ரெட்டி 171 பந்துகளில் ஒரு சிக்ஸ், 10 பவுண்டரி உட்பட சதத்தை விளாசி அசத்தினார். நம்பர் 8ல் களமிறங்கிய சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலியா மண்ணில் படைத்துள்ளார்.
இதன் காரணமாக இந்திஅய் அணி 3வது நாள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணி 3வது நாளின் முதல் செஷனை தாண்டுமா என்ற கேள்விகள் எழுந்த நிலையில், 4வது நாளிலும் பேட்டிங்கை தொடரவுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நிதிஷ் குமார் - வாஷிங்டன் சுந்தர் இருவரையும் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில், மறக்க முடியாத இன்னிங்ஸ் ஒன்றை நிதிஷ் குமார் ரெட்டி விளையாடி இருக்கிறார். அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே நிதிஷ் குமார் ரெட்டியின் ஆட்டம் என்னை கவர்ந்துவிட்டது. இந்த இன்னிங்ஸில் அவரின் நிதானமும், பிடிவாத குணமும் முழுமையாக வெளிப்பட்டுள்ளது.
இந்த டெஸ்ட் தொடரின் மிக முக்கிய இன்னிங்ஸை நிதிஷ் குமார் ரெட்டி விளையாடி இருக்கிறார். அவருக்கு உறுதுணையாக வாஷிங்டன் சுந்தர் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்திருக்கிறார். சிறப்பாக விளையாடி இருக்கிறீர்கள் என்று பாராட்டி இருக்கிறார். இதனால் இந்திய ஜாம்பவான்கள் பலரும் பாராட்டி வருவது இந்திய அணி வீரர்களுக்கும் உற்சாகமளிக்கும் என்று பார்க்கப்படுகிறது.