ஐதராபாத் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் 21 வயது வீதான நிதிஷ்குமார் ரெட்டி அபாரமாக விளையாடி அணியை காப்பாற்றி இருக்கிறார். இதன் மூலம் இந்திய அணி நான்காவது டெஸ்ட் போட்டியிலும் ஃபாலோ ஆணை தவிர்த்து தற்போது மோசமான நிலையில் இருந்து தப்பித்து இருக்கிறது.
இந்த நிலையில் நிதிஷ்குமார் ரெட்டிக்கு பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் மைக்கேல் இணையதளத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடபதி ராஜு நிதிஷ் குமார் ரெட்டியை வெகுவாக பாராட்டுகிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், நிதிஷ் குமார் ஒரு பாசிட்டிவான கிரிக்கெட் வீரர். தன்னுடைய இன்னிங்ஸை அவர் சிறப்பாக கட்டமைத்து விளையாடி இருக்கிறார். நெருக்கடியை சமாளிக்க அவர் சிங்கிள்ஸ் அதிக முறை எடுத்திருக்கிறார். இது மிகவும் முக்கியமான விஷயமாகும். பல கிரிக்கெட் வீரர்கள் சிங்கிள்ஸ் எடுப்பதையே மறந்து விட்டார்கள்.
நிதிஷ்குமார் ரெட்டிக்கு நீண்ட கிரிக்கெட் வாழ்க்கை அமைய வேண்டும் என்பதை என்னுடைய ஆசை. அவர் இளம் வீரர். இந்த சதம் அவருடைய நம்பிக்கையை மேலும் அதிகரித்திருக்கும். தற்போது டெஸ்ட் அணியில் தன்னுடைய இடத்தை அவர் உறுதி செய்து இருக்கிறார். எனினும் ஒரு நல்ல ஆல்ரவுண்டராக அவர் வரவேண்டும் என்றால் தன்னுடைய பந்துவீச்சில் அவர் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.
டெஸ்ட் போட்டிக்கு ஏற்றார் வகையில் பந்து வீச அவர் கொஞ்சம் உழைக்க வேண்டும். அதை மட்டும் அவர் செய்தால் ஒரு ஆல் ரவுண்டராக அவர் வெற்றி பெறுவார். தற்போது நிதீஷ்குமார் ரெட்டி அபாரமாக விளையாடி இருக்கிறார். இதன் மூலம் டாப் ஆர்டரில் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இது குறித்து பயிற்சியாளர் முடிவு எடுப்பார் என நினைக்கின்றேன்.
நமது இளம் வீரர்கள் நெருக்கடியான கட்டத்திலிருந்து அணியை மீட்டு வந்திருக்கிறார்கள். அதுவும் ஆஸ்திரேலியாவில் இப்படி செய்வது என்பது சுலபமான காரியம் கிடையாது. இது போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கிய தேர்வு குழுவினருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றேன். அவர் பந்துவீச்சில் மட்டும் கொஞ்சம் முன்னேற்றம் அடைந்தால் இந்திய அணியில் முக்கிய சொத்தாக அவர் விளங்குவார். அவரிடம் அதிக திறமை இருக்கிறது. இதனை அவர் சிறப்பாக செய்வார் என நம்புகிறேன் என வெங்கடாபதி ராஜு தெரிவித்துள்ளார்.