பெர்த்: ஜஸ்பிரிட் பும்ரா வரிசையில் இன்னும் ஏராளமான வேகப்பந்துவீச்சாளர்கள் தேசிய அணிகளின் கேப்டனாக வர வேண்டும் என்று ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். அதேபோல் சொந்த மண்ணில் விளையாடுவதே அழுத்தம் என்று கூறிய அவர், இந்திய அணியை வீழ்த்துவது சவாலான விஷயம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி நாளை களமிறங்கவுள்ளது. 2014-15 ஆண்டு நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி வெற்றிக்கு பின், ஆஸ்திரேலியா அணி ஒரு முறை கூட அந்த கோப்பையை வெல்லவில்லை. 10 ஆண்டுகளாக இந்திய மண்ணிலும், சொந்த மண்ணிலும் டெஸ்ட் தொடரை இழந்து தோல்வியை சந்தித்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல் 1996ஆம் ஆண்டில் இருந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக மட்டுமே நடத்தப்பட்டு வந்த நிலையில், முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக நடக்கவுள்ளது. அதேபோல் இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்பிரிட் பும்ரா செயல்பட இருக்கிறார். இதனால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் இரு அணிகளின் கேப்டன்களும் பவுலர்களாக இருப்பது இதுவே முதல்முறையாகும்.
இந்த நிலையில் பெர்த் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இந்திய அணி சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றால், நிச்சயம் மகத்தான வெற்றியாக இருக்கும்.
என்னை பொறுத்தவரை நான், பும்ரா மட்டுமல்லாமல் வரும் நாட்களில் அதிகளவிலான வேகப்பந்துவீச்சாளர்கள் கேப்டன்களாக வர வேண்டும். இந்த டெஸ்ட் போட்டியில் மிட்சல் மார்ஷ் நிச்சயம் பவுலிங் செய்வார். ஆனால் மிட்சல் மார்ஷ் ஒரு ஆல்ரவுண்டர். அவருடன் சேர்த்து 4 வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தாலும், எப்போதும் ஆல்ரவுண்டர்களை அதிகளவில் பவுலிங் செய்ய அறிவுறுத்தியதில்லை.
ஆனால் வலைப்பயிற்சியில் மிட்சல் மார்ஷ் பவுலிங் செய்து வருகிறார். அதேபோல் தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள மெக்ஸ்வீனி அவரின் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். டேவிட் வார்னரை போல் விளையாட முயற்சிக்க தேவையில்லை. மெக்ஸ்வீனியின் ஆட்டம் அதுவல்ல. அதிகளவில் பந்துகளை கீப்பர்களிடம் லீவ் செய்து பவுலர்களை களைப்படைய வைக்க கூடியது தான் அவரின் ஸ்டைல்.
அதனை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன். ஆஸ்திரேலியா அணிக்காக அலெக்ஸ் கேரி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளார். தற்போது மிகச்சிறந்த மனநிலையில் உள்ளார். அதேதான் ஸ்டீவ் ஸ்மித்திற்கும் பொருந்தும். வழக்கம் போல் பேட்டிங்கில் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். தொடர்ந்து பேட்டிங்கில் ஆழமான புரிதலுடன் செயல்பட்டு வருகிறார்.
பார்டர் கவாஸ்கர் டிராபியில் முதல்முறையாக 5 போட்டிகளில் விளையாடுகிறோம். இதை மிகப்பெரிய விஷயமாக நினைக்கிறேன். அதேபோல் இந்திய அணியின் இளம் வீரர் நிதீஷ் குமார் ரெட்டியுடன் ஐதராபாத் அணிக்காக இணைந்து விளையாடி இருக்கிறேன். அவர் திறமையான வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஐதராபாத் அணிக்காக அதிகளவில் பவுலிங் செய்ததில்லை. ஆனால் இரு பக்கமும் ஸ்விங் செய்யக் கூடியவர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பெர்த் டெஸ்ட் போட்டியின் போது ஐபிஎல் மெகா ஏலம் நடக்கவுள்ளதால், எந்த அழுத்தமோ, கவனச் சிதறலோ இருக்காது. இரு அணிகளின் வீரர்களும் ஏராளமான முறை ஏலத்தில் பங்கெடுத்தவர்கள் தான். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் கவனம் இருக்கும். அதேபோல், 10 ஆண்டுகளாக பார்டர் கவாஸ்கர் டிராபியை வெல்லவில்லை என்பதால் எந்த அழுத்தம் கிடையாது. சொந்த மண்ணில் விளையாடும் ஒவ்வொரு போட்டியும் அழுத்தம் நிறைந்தது தான். இந்திய அணியுடன் விளையாடுவது கூடுதல் சவாலாக இருக்கும் என்று கூறியுள்ளார்.