மும்பை : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி தகுதி பெற வேண்டும் என்றால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.
அவ்வாறு நடந்தால் மட்டுமே இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும். இந்த சூழலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, ரிஷப் பந்த் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்று பலரும் கணிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆன ரவி சாஸ்திரி இந்த இரண்டு வீரர்கள் கையில் தான் இந்தியாவின் வெற்றி அடங்கியிருப்பதாக கூறி இருக்கிறார். அது யார் என்னவென்று தற்போது பார்க்கலாம். ஐசிசி இணையதளத்திற்கு ரவி சாஸ்திரி அளித்துள்ள பேட்டியில், இந்திய அணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரர் என்றால் அது ஜெயஸ்வால் தான்.
தொடக்க வீரராக களம் இறங்கும் அவர் அதிரடியாக விளையாடினால் அது எதிரணியை கடும் நெருக்கடியில் ஆழ்த்தும் ஜெய்ஸ்வால் சுழற் பந்துவீச்சை அபாரமாக எதிர்கொள்வார். தனக்கு எப்படி வருமோ அப்படி பேட்டிங் செய்வதில் ஜெய்ஸ்வால் வல்லவர். கிரிக்கெட் புத்தகத்தில் எந்தெந்த ஷாட்கள் எல்லாம் இருக்கிறதோ, அதை எல்லாம் ஜெய்ஸ்வால் சிறப்பாக ஆடுவார்
ஜெய்ஸ்வால் ஒரு நல்ல பொழுதுபோக்கை கொடுக்கக் கூடியவர். தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் அதனை ஏற்கனவே அவர் பெரிய ஸ்கோர் அடித்து நிரூபித்து காட்டி இருக்கிறார். எந்த ஒரு வீரராலும் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் எல்லாம் அவ்வளவு எளிதாக அடிக்க முடியாது. ரன் அடிக்க வேண்டும் என்ற பசியும், நல்ல திறமையும் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
இரண்டாவது வீரர் என்றால் அது பும்ரா தான். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். உலகில் தற்போது இருக்கும் மிகப் சிறந்த பாஸ்ட் பவுலர்களில் பும்ரா தான் சிறந்த வீரராக இருக்கின்றார். ஆஸ்திரேலியாவில் பாட் கம்மின்ஸ் எவ்வாறு இருக்கிறாரோ அதை போல் இந்தியாவுக்கு பும்ரா விளங்குகிறார். இதுபோன்ற ஒரு மிகப்பெரிய தொடரில் பும்ரா தன்னுடைய பந்துவீச்சு மூலம் பேச்சை நிகழ்த்த வேண்டும் என நினைப்பார்.
இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று பும்ரா குறிக்கோள் வைத்திருப்பார். இதேபோன்று ஆஸ்திரேலியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் என்றால் அது கம்மின்ஸ் தான். இந்தியாவுக்கு எதிராக பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா மண்ணில் எட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இதுவரை 35 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். இதே போல் நாதன் லயான் 15 போட்டியில் விளையாடி 60 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.