மும்பை: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்விக்கு யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் அளித்துள்ள பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, தோனி, ராகுல் டிராவிட் உள்ளிட்ட எந்த வீரரையும் தேர்வு செய்யாத யோக்ராஜ் சிங், ஆல்ரவுண்டரை தேர்வு செய்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் சர்ச்சைக்கு புகழ்பெற்றவர் யோக்ராஜ் சிங். இவர் யாரும் அல்ல.. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் யுவராஜ் சிங்கின் தந்தை தான். இந்திய அணிக்காக யோக்ராஜ் சிங் 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்கிறார். இதன்பின் யுவராஜ் சிங்கை உருவாக்கியதில் யோக்ராஜ் சிங்கின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

அதேபோல் தற்போது ஏராளமான இளம் வீரர்களை யோக்ராஜ் சிங் உருவாக்கி வருகிறார். இந்த நிலையில் யோக்ராஜ் சிங் அளித்துள்ள பேட்டி ஒன்று சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அதில் யோக்ராஜ் சிங் பேசுகையில், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஏராளமான சிறந்த வீரர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். சிறந்த ஆல்ரவுண்டர் என்றால், அது கபில் தேவ் தான்.
அதேபோல் சிறந்த பேட்ஸ்மேன் என்று பார்த்தால் யுவராஜ் சிங், சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லக்ஷ்மண், சவுரவ் கங்குலி உள்ளிட்டோர் இருக்கின்றனர். ஆனால் இவர்கள் அனைவரையும் ஒப்பிட்டால், யுவராஜ் சிங் தான் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் என்று சொல்வேன். என்னுடைய பட்டியலில் யுவராஜ் சிங்கிற்கு தான் முதலிடம் கொடுப்பேன்.
ஒருவேளை யுவராஜ் சிங் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தால், நிச்சயமாக 200 சதங்களையாவது விளாசுவார் என்று நினைத்திருந்தேன். யுவராஜ் சிங் அவ்வளவு திறமையான வீரர்.. அதேபோல் சச்சின் டெண்டுல்கரை எப்போதும் மூத்த அண்ணனை போல் தான் யுவராஜ் சிங் நினைத்து வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக 304 ஒருநாள் போட்டிகள், 40 டெஸ்ட் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியவர் யுவராஜ் சிங். சுமார் 12 ஆண்டுகள் இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்தி வந்த யுவராஜ் சிங், 11 ஆயிரம் ரன்களையும், 148 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். இந்திய அணி 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். புற்றுநோய்க் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கிய யுவராஜ் சிங், பின் கம்பேக் கொடுத்தாலும் பழைய ஆட்டத்தை அவரால் வெளிப்படுத்த முடியவில்லை.